மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாதகமாக பல விஷயங்கள் உள்ளன. ஆனால், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து மட்டுமே ஒரு சிக்கல் உள்ளது.
நியூசிலாந்து அணியுடன், இந்திய அணி உலகக்கோப்பை லீக் சுற்றில் மோதிய போது அதிக ரன்கள் கொடுத்தவர் குல்தீப் யாதவ் தான்.

உண்மையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பெரிதாக குற்றம் சொல்ல முடியாது. ஆனால், பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் குல்தீப் யாதவ்வின் ஸ்பின் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை. மேலும், இந்திய அணியின் ஷமி. பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சில் ரன் குவித்தால் விக்கெட் பறிபோகும் என்பதால் நியூசிலாந்து அணி, குல்தீப் யாதவை குறி வைத்து ரன் குவித்தது.
அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்தது. இதில் குல்தீப் யாதவ் வீசிய 10 ஓவரில் மட்டுமே 73 ரன்கள் குவித்தது நியூசிலாந்து. அந்தப் போட்டியில் இந்தியா சரியாக ஐந்து பந்துவீச்சாளர்]களை மட்டுமே வைத்து ஆடியது. ஹர்திக் பாண்டியா காயத்தால் ஆறாவது பந்துவீச்சாளர் அணியில் இல்லை.
அதனால், வேறு வழியின்றி குல்தீப் யாதவ் ரன் விட்டுக் கொடுத்த போதும் அவரது பத்து ஓவர் கோட்டாவை முடிக்க வைத்து சமாளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த நிலையில், அரை இறுதியிலும் இந்தியா லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய அதே ஐந்து பந்துவீச்சாளர்களுடன் தான் களமிறங்கப் போகிறது.
இந்த முறையும் நியூசிலாந்து அணி, மற்ற நான்கு பந்துவீச்சாளர் ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடிவிட்டு குல்தீப் யாதவ் ஓவர்களை குறி வைத்து ரன் குவிக்க முயற்சி செய்யலாம். லீக் போட்டி போல அரை இறுதியில் இந்தியா இதை சமாளித்துக் கொள்ளலாம் என விட முடியாது.
இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா இந்த பிரச்சனைக்கு முன் கூட்டியே ஒரு தற்காலிக தீர்வை கண்டுபிடித்து இருக்கிறார். அதன்படி அணியை மாற்றாமல், பகுதி நேர பந்துவீச்சாளர்களை இருக்கும் வீரர்களை கொண்டே உருவாக்கி விட்டார் ரோஹித் சர்மா.
அதன்படியே நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா பந்து வீசினர். நீண்ட காலமாக பந்து வீசாத விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்கள் ஓவர்களில் ஆளுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, நியூசிலாந்து அணி குல்தீப் யாதவ், அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரை குறி வைத்தால் நிச்சயம் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதன் மூலம், ஓரளவு நியூசிலாந்து அணியின் ஒரு பந்துவீச்சாளரை குறி வைக்கும் திட்டத்தை முறியடிக்கலாம். அதே சமயம், பகுதி நேர பந்துவீச்சாளர்களும் அதிக ரன்கள் கொடுக்காமல் இருக்க வேண்டும்.