மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் ஒரு வழியாக எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறப் போகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா - நெதர்லாந்து லீக் போட்டி மட்டுமே மீதமுள்ளது. இந்த நிலையில், லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

இதில் இந்தியாவுடன் அரை இறுதியில் மோதப் போகும் அணி எது என்பது ஏற்கனவே போட்டு வைத்த அட்டவணை விதியின் படி தேர்வு செய்யப்படும். அதாவது, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெறும் அணி நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடன் அரை இறுதியில் மோதும். அதே போல, இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த அணிகள் மற்றொரு அரை இறுதியில் மோதும்.
அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியுடன், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி அரை இறுதியில் மோத உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரிலும் இதே போலத் தான் நடந்தது. அப்போதும் இந்தியா புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்தது. நியூசிலாந்து அணி நான்காம் இடம் பிடித்து இந்திய அணியுடன் அரை இறுதியில் மோதியது.
2019 உலகக்கோப்பையில் அரை இறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளியேறிய நிலையில், அதற்கு 2023 உலகக்கோப்பையில் இந்தியா பழி தீர்க்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி நவம்பர் 15 (புதன் கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு துவங்கி நடைபெறும்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியான தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும். இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், நவம்பர் 19 (ஞாயிற்றுக் கிழமை) அன்று அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதும்.