தரம்சாலா : இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ள நிலையில், இரண்டு முக்கிய வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர்.
ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா - நியூசிலாந்து போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்த நிலையில், பாண்டியாவிற்கு மாற்று வீரர்களாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் என இருவருமே காயத்தில் சிக்கி உள்ளனர். இது இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி போட்டி நடைபெற உள்ள தரம்சாலா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், அவருக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட அதிக வாய்ப்பு இருந்ததால் அவர் பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

அப்போது த்ரோடவுன் நிபுணர் ரகு வீசிய ஃபுல் டாஸ் பந்தை அடிக்க முயலும் போது, சூர்யகுமார் யாதவ் கையில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார், உடனே அவருக்கு வலி இருந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்கப்பட்டது. அவர் உடனடியாக பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டு கிளம்பினார். அவருக்கு பெரிய காயம் இல்லை எனக் கூறப்பட்டாலும் அவரால் நியூசிலாந்து போட்டியில் பங்கேற்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்து இஷான் கிஷன் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது தேனீக்களிடம் சிக்கினார். அதில் ஒன்று அவர் பின் கழுத்தில் கொட்டியது. இதை அடுத்து வலியில் இருந்த அவர் உடனடியாக வெளியேறினார். பாண்டியா இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய சிறந்த தேர்வாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் இருவருமே காயத்தில் சிக்கி இருப்பது புதிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் இருவரும் முழு உடற்தகுதியுடன் இருப்பார்களா? என்பதை அறிந்த பின்னரே அணியை முடிவு செய்ய முடியும்.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சிராஜ் அல்லது ஷர்துல் தாக்குரை நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. தற்போது அந்த திட்டத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.