மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கு நடுவே இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், ட்விட்டரில் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதை ஜீரணிக்கவே கடினமாக உள்ளதாக கூறி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்தார் ஹர்திக் பாண்டியா. முதல் நான்கு போட்டிகளில் பங்கேற்ற அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்தார்.

அவரை அரை இறுதிச் சுற்றுக்கு முன்னதாக அணியில் சேர்க்க பிசிசிஐ கடும் முயற்சி எடுத்தது. பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவை தங்கச் செய்து அங்கே அவருக்கு சிகிச்சை மற்றும் மீண்டும் போட்டியில் ஆட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. லண்டனை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் படி பாண்டியாவை மீட்டுக் கொண்டு வர பிசிசிஐ போராடியது.
எனினும், அவரால் பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. முழு வீச்சில் பந்து வீச முடியவில்லை. அதற்கு இன்னும் அதிக காலம் ஆகலாம் என்ற நிலையே இருந்தது. பாண்டியா உறுதியாக முழு உடற்தகுதி பெறுவார் என சொல்ல முடியாத நிலையே இருந்தது.
மறுபுறம், உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச் சுற்று நெருங்கி விட்டது. இனியும் தாமதித்தால் ஒரு வீரர் குறைவாக இருப்பதால் அரை இறுதி போட்டியின் போது இந்திய அணித் தேர்வில் சிக்கல் வரலாம் என்பதால் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை நீக்கி விட்டு, வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளது.
இந்த நிலையில், தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறித்து ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார். "உலகக்கோப்பை தொடரில் இனி நான் இல்லை என்பதை ஜீரணிக்கவே கடினமாக உள்ளது. ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு பந்திலும் நான் இந்திய அணிக்காக என் குரலை கொடுத்துக் கொண்டே இருப்பேன். அணியுடனே நான் இருப்பேன். என் மீது அன்பு செலுத்திய, மீண்டு வர வாழ்த்திய, ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றி. இந்த அணி எனக்கு எப்போதுமே சிறப்பானது. அனைவரையும் நாம் பெருமைப்படுத்துவோம்" எனக் கூறி இருக்கிறார் பாண்டியா.