கொல்கத்தா : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இதே ஹசன் ராசா இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது இந்தியாவுக்கு மட்டும் தனியாக பந்துகள் கொடுக்கப்படுகின்றன. அதனால் தான் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்து விக்கெட் வீழ்த்தி பெரிய வெற்றியை பெற்று வருகிறது என கூறி இருந்தார்.
அப்போதே வாசிம் அக்ரம் உள்ளிட்ட சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பிற நாட்டு முன்னாள் வீரர்கள் ஹசன் ராசா கருத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், ஹசன் ராசா மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் வான் டேர் டுசென் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கப்பட்டு அவுட் ஆனார்.
முதலில் ஜடேஜா வீசிய பந்து அவர் காலில் பட்ட போது அவுட் கேட்கப்பட்டது. அப்போது அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். பின்னர் ஜடேஜா ரிவ்யூ கேட்குமாறு கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்டார். அதன் பின் ரிவ்யூ கேட்கப்பட்டது. அப்போது ரீப்ளேவில் பந்து லெக் திசையில் வருவது போல இருந்தது. ஆனால், மிடில் ஸ்டம்ப்பில் பந்து படுவதாக ரீப்ளேவில் காட்டப்பட்டது.
இது குறித்து பேசிய ஹசன் ராசா, "ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். இங்கே நாம் டிஆர்எஸ் கேட்கப்பட்டது பற்றி பேச வங்கதேசம் வேண்டும். டுசென் பேட்டிங் செய்யும் போது, பந்து லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்ப்பில் படுகிறது. அது எப்படி சாத்தியம்? அந்த பந்து லைனில் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்ப் நோக்கி தான் போனது. எல்லோரையும் போல நானும் என் கருத்தை சொல்கிறேன். இதை நாம் கவனிக்க வேண்டும். டிஆர்எஸ்-இல் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது." என்றார் அவர்.