கொல்கத்தா : உலகின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சினின் மிகப் பெரிய சாதனையான 49 ஒருநாள் போட்டி சதம் அடித்த சாதனையை சமன் செய்த போது, அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
விராட் கோலி ஆடுகளத்தில் ஆக்ரோஷமான குணம் கொண்டவர். பீல்டிங்கின் போது அவரது ஆக்ரோஷம் உச்சகட்டமாக இருக்கும். அதே போல, சதம் அடித்தால் அவர் எகிறி குதிப்பார் அல்லது கையை மடக்கி காற்றில் ஒரு குத்து விடுவார்.
விராட் கோலி மட்டுமின்றி பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த உடன் ஆக்ரோஷமாக கொண்டாடுவது வழக்கம் தான். கோலி அதில் இயல்பிலேயே ஆக்ரோஷ குணம் கொண்டவர் என்பதால் அவர் செய்கை அதிகப்படியாகவே இருக்கும். தன் ஒவ்வொரு சதத்தின் போதும் இந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.

ஆனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தன் 49வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்த அவர் சதம் அடித்த பின் அமைதியாகவே இருந்தார். அதிகபட்சம் அமைதியான நிலையில் ஹெல்மெட் மற்றும் பேட்டை உயர்த்தி காட்டினார். வானத்தை பார்த்து நன்றி கூறினார். அத்துடன் அவரது கொண்டாட்டம் முடிந்தது.
அவரது இந்த அமைதியான கொண்டாட்டத்துக்கு காரணம் தன் ஹீரோ மற்றும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்கிறோம் எனும் போது அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர் இப்படி நடந்து கொண்டார் என அவரது ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன் 47வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்த போது எகிறி குதித்து கொண்டாடி இருந்தார். அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக 48வது சதம் அடித்த போது கொஞ்சம் குறைத்து நின்றபடி காற்றில் கையை சுழற்றி கொண்டாடினார்.
ஆனால், சச்சின் சாதனையை சமன் செய்த நிலையில் அமைதியான முறையில் அதை கொண்டாடினார். போட்டி முடிந்த உடன் சச்சின் அவருக்கு வாழ்த்து கூறியதை பற்றி பேசிய போது என் ஹீரோவின் ரெக்கார்டை சமன் செய்வது எனக்கு ரொம்ப சிறப்பானது. டிவியில் அவரை பார்த்து வளர்ந்தேன். அப்படி இருக்க அவரிடம் இருந்து எனக்கு வாழ்த்து கிடைத்து இருப்பது என்பது வார்த்தையால் சொல்ல முடியாத விஷயம் என்றார் விராட் கோலி.