உலகக்கோப்பை - வாய்ப்பை தவறவிட்ட ரோஹித், கோலி.. தொட முடியாத உயரத்தில் தென்னாப்பிரிக்க வீரர்
மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் முதல் இடத்தை தவற விட்டு இருக்கிறார்கள்.
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்து இருக்கிறார்கள். அதே சமயம், உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காவது இடத்திலும், விராட் கோலி ஏழாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் இருக்கிறார். அவர் 7 போட்டிகளில் 545 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 2023 உலகக்கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்துள்ளார் டி காக்.

நான்காம் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 398 ரன்கள் எடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் 148 ரன்கள் குவித்தால் மட்டுமே டி காக்கை முந்தி முதல் இடத்தை பிடிக்க முடியும். அது கடினமான காரியம் தான்.
அதே போல, விராட் கோலி தற்போது 6 போட்டிகளில் 354 ரன்கள் குவித்துள்ளார். அவர் அடுத்த போட்டியில் 192 ரன்கள் எடுத்தால்,
7 போட்டிகளின் முடிவில் டி காக்கை முந்தி முதல் இடத்தை பிடிக்கலாம். ஆனால், அதுவும் கடினமான காரியம் தான்.
உலகக்கோப்பை லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மொத்தம் ஒன்பது போட்டிகளில் ஆட வேண்டிய நிலையில், டி காக் அடுத்து வரும் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காமல் போனால் மட்டுமே ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.
டி காக் தவிர்த்து, இதே பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா (7 போட்டிகள் - 415 ரன்கள்), டேவிட் வார்னர் (6 போட்டிகள் - 413 ரன்கள்) ஆகியோரும் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு முக்கிய போட்டியாளர்களாக இருக்கிறார்கள். அதிக ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றால் தொடர் நாயகன் விருதை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications