மும்பை : இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடி இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருகுமி இஷான் கிஷன் வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக ஆடிக் கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர் நீக்கப்படலாம் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கூறி இருக்கலாம் என தெரிகிறது. அதனால் தான் அவர் இலங்கை போட்டிக்கு முன்னதாக கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
மற்ற வீரர்கள் எல்லாம் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பயிற்சி செய்து கிளம்பிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் சுமார் இரண்டு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். அவரது பலவீனம் ஷார்ட் பந்துகளை சந்திப்பது தான். அதை சரி செய்யவே அவர் இந்த பயிற்சியில் தீவிர முயற்சி செய்தார்.

மேலும், அவரது ஃபிரன்ட் ஃபூட் சரியாக இயங்கவில்லை என்பதை முன்னாள் வீரர்கள் பலர் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். அதையும் சரி செய்ய அவர் இந்த பயிற்சியின் போது முயன்றார். ஸ்ரேயாஸ் ஐயர் இப்படி தீவிரமாக பயிற்சி செய்கிறார் என்றால், நிச்சயம் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரிடம் அவரது இடம் பறிக்கப்படலாம் என கூறி இருக்க வேண்டும்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆறு போட்டிகளில் ஆடி மொத்தமாக எடுத்த ரன்கள் 134 மட்டுமே. இதன் சராசரி 33.5. இதில் ஒரு அரைசதமும் அடங்கும். ஆனாலும், எந்த ஒரு ஆட்டமும் இவரால் தான் அணி வென்றது என கூற முடியாத அளவுக்கு தான் இருந்தது. பல முறை முக்கியமான கட்டத்தில் அணியை கை விட்டு ஆட்டமிழந்து சென்றார்.
குறிப்பாக அவர் ஷார்ட் பந்துகளை புல் ஷாட் அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். அதனால், ஷார்ட் பந்துகளை எதிர்பார்த்து காத்திருப்பதால், அப்படி வராவிட்டாலும் கூட புல் ஷாட் அடிக்க முயற்சி செய்து விக்கெட்டு பறிகொடுத்து வருகிறார், எதிரணிகளுக்கும் இவரது பலவீனம் தெரிந்து விட்டது. இந்த நிலையில் தான் ஸ்ரேயாஸ் கடும் பயிற்சியில் ஈடுபடுமாறு மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.