மும்பை : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் முக்கிய சாதனை ஒன்றை உடைத்து வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் விராட் கோலி அபாரமாக ஆடி அரைசதம் கடந்து 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் மூலம் அவர் 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் குவித்து முக்கிய மைல்கல்லை கடந்தார்.

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இத்துடன் எட்டாவது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை தாண்டி இருக்கிறார். முன்னதாக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஏழு முறை ஒரே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து இருந்தார்.
சச்சினின் அந்த சாதனையை 2019 ஆம் ஆண்டே விராட் கோலி சமன் செய்தார். ஆனால், அதை முறியடிக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் ஆகி உள்ளது. தற்போது விராட் கோலி எட்டு முறை ஒரே ஆண்டில் 1000 ஒருநாள் போட்டி ரன்களை அடித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் ஆடுவது குறைந்து விட்ட நிலையில், விராட் கோலியின் இந்த சாதனையை இனி எந்த வீரரும் முறியடிக்க முடியாது என கருதப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் நடக்கும் நிலையில், சுப்மன் கில், ரோஹித் சர்மா, இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆகியோரை தொடர்ந்து விராட் கோலி ஒரே ஆண்டில் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா போட்டியின் இரண்டாவது பந்திலேயே 4 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், விராட் கோலி அபார ஆட்டம் ஆடி ரன் குவித்தனர். சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர்.