மும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்தை ஸீம் செய்து இலங்கை வீரர்களை பயத்துடன் பின் காலில் நின்று ஆட வைத்ததாக பாராட்டி இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இலங்கை அணி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களிடம் இலங்கை பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர். பும்ரா 1, சிராஜ் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், ஷமி 5 விக்கெட்கள் சாய்த்தார். அவர் வீசிய போது இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பயத்துடன் ஆடியதாக கூறி இருக்கிறார் வாசிம் அக்ரம்.

பொதுவாக பந்து வேகமாக வந்தாலோ, ஆட முடியாத அளவுக்கு ஸ்விங் அல்லது ஸீம் ஆனாலோ பேட்ஸ்மேன்கள் பின்னங்காலில் (Back foot) நின்று ஆடுவார்கள். அதன் மூலம் பந்தை கணிக்க கூடுதல் அவகாசம் கிடைக்கும். பொதுவாக இப்படி ஆடினால் பந்துவீச்சாளர், அந்த பேட்ஸ்மேனை அச்சுறுத்துவதாக கிரிக்கெட்டில் கருதப்படும்.
அதைத் தான் குறிப்பிட்டு ஷமியை பாராட்டி இருக்கிறார் வாசிம் அக்ரம். "அவர் பந்தை ஸ்விங் செய்யவில்லை. அதிகமாக ஸீம் செய்தார். அனைத்து பேட்ஸ்மேன்களும் பேக் ஃபூட்டில் நின்று ஆடினார்கள். அவரது ஒட்டுமொத்த ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் இலங்கை பேட்ஸ்மேன்களை வைத்து பொம்மைகளுடன் ஆடுவது போல ஆடினார். அது பார்க்க சிறப்பாக இருந்தது" என ஷமி குறித்து கூறி இருக்கிறார் வாசிம் அக்ரம்.
மேலும், "இந்த போட்டியில் மட்டுமல்ல, இந்த முழு உலகக் கோப்பையிலும் அவருடைய பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்தது. 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தனக்கு வாய்ப்பு வரும் வரை அவர் காத்திருந்தார், வாய்ப்பு வரும்போது, அதை வைத்து பிரகாசிக்க முயற்சி செய்து அதில் வெற்றி பெற்று இருக்கிறார்." என்று பாராட்டினார் வாசிம் அக்ரம்.