டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து, பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் இந்திய அணியின் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட அது ஒரு வகையில் அணியின் அரை இறுதி வாய்ப்புக்கே பாதிப்பாக மாறலாம்.

ஒரு வேளை இந்தியா முதலில் பந்து வீசினால், ஆப்கானிஸ்தான் அணி எத்தனை ஓவர்களில் ரன் சேர்த்ததோ, அதைக் காட்டிலும் 10 - 15 ஓவர்களுக்கு முன்பே இந்திய அணி இலக்கை எட்ட வேண்டும்.
இதற்கு காரணம், 2023 உலகக்கோப்பை தொடரில் முன்பு எப்போதும் இல்லாத சில புதிய நடைமுறைகள் கிரிக்கெட்டுக்குள் புகுந்து உள்ளது. அது தான் நெட் ரன் ரேட்.
இதற்கு முன்பும் நெட் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் போட்டிகளை அணுகும். ஆனால், அது தொடரின் லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் தான் நடக்கும். அப்போது அரை இறுதிக்கு எந்த அணிகள் செல்லும் என்ற சிக்கல் இருக்கும் போது ஒரே அளவிலான புள்ளிகள் பெற்றால், நெட் ரன் ரேட் அடிப்படையில் மன்னே இருக்கும் அணி அரை இறுதிக்கு தேர்வு ஆகும்.
ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் இருந்தே நெட் ரன் ரேட் பந்தயம் தொடங்கி விட்டது. அதை தொடங்கி வைத்தது நியூசிலாந்து அணிதான். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் எடுத்த ரன்களை, 36.2 ஓவர்களில் எல்லாம் எடுத்து தங்கள் அணியின் நெட் ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டது நியூசிலாந்து.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாரபட்சம் பார்க்காமல், இலங்கை அணியை அடித்து துவைத்து 428 ரன்கள் குவித்தது. இலங்கை அணி 326 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா அணியின் நெட் ரன் ரேட் இரண்டுக்கும் மேல் உள்ளது.
தென்னாப்பிரிக்கா - இலங்கை போட்டி நடந்த அதே டெல்லி மைதானத்தில் தான் இந்திய அணியின் போட்டியும் நடைபெற உள்ளது. அதனால், இந்த மைதானத்தில் எளிதாக 400 ரன்களை எடுக்கலாம். எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கும் மேல் எடுக்கவே நினைக்கும். அப்கானிஸ்தான் அணியை 200 ரன்களுக்கும் உள்ளேயே தோற்கடிக்க பார்க்கும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணி நிதான ஆட்டம் ஆடுவதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் 150 - 200 ரன்களுக்குள் அந்த அணியை சுருட்ட வேண்டும். அப்படி செய்தால் அடுத்து இந்தியா டி20 போட்டி போல ஆடி இலக்கை 20 - 25 ஓவர்களில் எட்டலாம். அதன் மூலம், நெட் ரன் ரேட் அதிகரிக்கும்.
இந்திய அணி இந்தப் போட்டியில் அதிக நெட் ரன் ரேட் பெறாமல் போனால் அது இந்திய அணியின் அர இறுதி வாய்ப்பை கூட பறிக்கலாம். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இப்போதே மிக அதிக ரன் ரேட்டில் முன்னே உள்ளன.