மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டு, இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா ஆல் - ரவுண்டர் என்ற நிலையில் வேகப் பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஒரு முக்கிய பலவீனம் உள்ளது. விக்கெட்களை எடுத்தாலும், ரன்களை கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டு விடுவார். அவரது முந்தைய ரெக்கார்டு அப்படி தான் உள்ளது.
யார் இந்த பிரசித் கிருஷ்ணா? இவர் ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்று வீரரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

யார் இந்த பிரசித் கிருஷ்ணா?
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பிரசித் கிருஷ்ணா. தன் மாநில அணியில் அவர் பங்கேற்று ஆடி வந்தார். சென்னையில் இருக்கும் எம்ஆர்எஃப் ஃபவுண்டேஷனில் கிளென் மெக்கிராத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பயிற்சி மையத்தில் ஜெஃப் தாம்சனிடமும் சிறப்பு பயிற்சி பெற்றவர்.
2015இல் வங்கதேச ஏ அணிக்கு எதிரான முதல்தர டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2018 முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் பிரசித் கிருஷ்ணா இதுவரை 51 போட்டிகளில் 49 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய அணிக்காக 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 29 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 2 சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக ஆடி 4 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
பிரசித் கிருஷ்ணாவின் பலவீனம் என்ன?
பிரசித் கிருஷ்ணா நல்ல விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் என்ற பெயரை ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் பெற்று இருக்கிறார். ஆனால், அவர் அதிக ரன்களை வாரிக் கொடுப்பதே பெரிய சிக்கல். ஒருநாள் போட்டிகளில் அவரது பந்துவீச்சு சராசரி 25 ஆகும். அதாவது அவர் 1 விக்கெட் வீழ்த்த சராசரியாக 25 ரன்களை விட்டுக் கொடுக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 5.60 ரன்கள் கொடுக்கிறார்.
பிரசித் கிருஷ்ணாவை உலகக்கோப்பை போட்டிகளில் ஆட வைத்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியாவிடமும் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் பிரசித் கிருஷ்ணா ஏன்?
ஹர்திக் பாண்டியா ஆல் - ரவுண்டர் என்ற போதும் அவர் முழுமையாக ஆடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருப்பதால் அவரது பேட்டிங் அணிக்கு தேவைப்படவில்லை.
அதே சமயம், பாண்டியா மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அணியில் இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஐந்து ஓவர்களாவது அவர் வீசினார். இந்த நிலையில், காயம் காரணமாக அவரை உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கி இருக்கும் இந்திய அணி நிர்வாகம், பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்ய காரணமே அணியில் மாற்று வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் அவசியம் தேவை என கருதுவது தான்.
பாண்டியா அணியில் ஆடிய போது ஷர்துல் தாக்குர் மற்றும் முகமது ஷமி மாற்று வேகப் பந்துவீச்சாளர்களாக அணியில் இருந்தனர். தற்போது பாண்டியா இடத்தை ஷமி நிரப்பி இருக்கிறார். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால், மாற்று வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் தேவை எனக் கருதியே பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நேரடியாக பாண்டியாவிற்கு மாற்று வீரர் என கருத முடியாது. ஆனால், பாண்டியாவின் பந்துவீச்சுக்கு மட்டும் இவர் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணிக்கும் அதுதான் இப்போதைய தேவை என்பதால் இவர் வாய்ப்பு பெற்றுள்ளார்.