மும்பை : இலங்கை அணி வீரர்கள் மொத்தமாக செய்த ஒரு தவறுதான் அந்த அணி படுதோல்வி அடையக் காரணம் என சில விமர்சகர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தை கூறி இருக்கின்றனர்.
இந்திய அணியிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை சந்தித்தது.
இதற்கு முக்கிய காரணம், இலங்கை அணி வீரர்கள் இந்திய அணி மீது வைத்திருந்த பயம் தான் எனவும், இது ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இலங்கை அணி மீளவில்லை என்றும், அதுவே மீண்டும் அதே போன்ற ஒரு விக்கெட் வீழ்ச்சி ஏற்பட காரணம் என்றும் கூறினர் விமர்சகர்கள்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் 7 ஓவர்களில் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார். பாண்டியா 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
தற்போது 2023 உலகக்கோப்பை தொடரிலும் இலங்கை, அணி இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி உள்ளது. இந்தப் போட்டியிலும் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா 1, சிராஜ் 3, ஷமி 5 விக்கெட் வீழ்த்தினர். கிட்டத்தட்ட அதே மாதிரியான வீழ்ச்சி மீண்டும் நடந்துள்ளது.
முதலில் ஆடிய இந்திய அணி 357 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்த போதே இலங்கை அணி மொத்தமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு மனதளவில் சென்று விட்டது. நம்மால் இத்தனை பெரிய இலக்கை எட்ட முடியாது என்ற எண்ணத்துக்கு இலங்கை அணி வந்து விட்டது.
358 ரன்கள் இலக்கை எட்ட முடியாது என்றால் அடுத்து என்ன செய்வது என்ற திட்டமும் அவர்களிடம் இல்லை. இப்படி திட்டமே இல்லாத நிலையில், இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மீதும் அச்சத்தோடு களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தார்கள். இது நிச்சயம் மனதளவில் ஏற்பட்ட தோல்வி தான்.