லக்னோ : இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே அணியில் ஆலோசனைகள் நடக்கிறது, திட்டங்கள் தீட்டுகிறோம் என சொல்ல ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஆறு போட்டிகளில் ஆடி ஆறிலும் வெற்றி பெற்றுள்ளது. தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக உள்ளது.
இந்திய அணியில் பேட்டிங்கை விட பவுலிங் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் கை கொடுத்து வருகிறார்கள்.

முதலில் பும்ரா, குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டை நடத்திய நிலையில், ஷமி கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே அணியில் இடம் பெற்று 9 விக்கெட்களை சாய்த்து இருக்கிறார். பும்ரா ஆறு போட்டிகளில் 14 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் எப்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இத்தனை சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
"ஷமி மற்றும் பிற பந்துவீச்சாளர்கள் போன்ற திறமை வாய்ந்தவர்கள் அணியில் இருக்கும் நிலையில், நாம் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசவேண்டிய தேவையே இல்லை. இவர்கள் போதிய அளவு கிரிக்கெட் ஆடி விட்டார்கள். அவர்களுக்கு அணியின் தேவை என்ன என்பது தெரியும். எனக்கும், அணியின் ஆலோசனைகள் நடைபெறுகிறது, திட்டங்கள் தீட்டுகிறோம் என சொல்ல ஆசைதான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை." என்றார் பராஸ் மாம்ப்ரே.
மேலும், "அணியின் பந்துவீச்சாளர்களின் தரம் மற்றும் அவர்கள் அணிக்கு கொண்டு வரும் அனுபவம் ஆகியவற்றால் என் பணி மிகவும் எளிமையாக மாறி விட்டது. நான் வீரர்களை நிர்வகிக்கும் வேலையை மட்டுமே செய்கிறேன். அவர்கள் போதிய அளவு கிரிக்கெட் ஆடி விட்டார்கள். அவர்களுக்கு பந்துவீச்சு குறித்து உள்ளும், புறமும் நன்றாக தெரியும். எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்திய அணியின் பவுலிங் செயல்பாட்டுக்கான பாராட்டு அனைத்தும் அவர்களுக்கே உரியது" என்றார் பராஸ் மாம்ப்ரே.