சென்னை : பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த தென்னாப்பிரிக்க வீரர் போட்டி முடிந்த உடன் தன் சமூக ஊடக பக்கத்தில் "ஜெய் ஸ்ரீ அனுமான்" என பதிவிட்டு இருக்கிறார். அதற்கு என்ன காரணம்?
தென்னாப்பிரிக்கா வீரர் கேஷவ் மகாராஜ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் அவரது தந்தை வழி முன்னோர்கள் 1874இல் குடியேறியவர்கள். நூறு ஆண்டுகளை கடந்து தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் கேஷவ் மகாராஜ் இந்திய ஆன்மீக மற்றும் கலாசார தொடர்புகளை இன்னும் தொடர்கிறார். தன்னை தீவிர ஹனுமான் பக்தராக அவ்வப்போது காட்டிக் கொண்டு இருக்கிறார்.
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 271 ரன்கள் வெற்றி இலக்கை தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போது ஒரு கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்தது தென்னாப்பிரிக்கா.

அப்போது ஒன்பதாம் வரிசை வீரர் கேஷவ் மகாராஜ் மற்றும் பதினோராம் வரிசை வீரர் ஷம்சி இணைந்து கடைசி 11 ரன்களை எடுத்தனர். மகாராஜ் மிக நிதானமாக ஆடி ஒவ்வொரு ரன்னாக சேர்த்து பின் 48வது ஓவரில் ஒரு ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதயத் துடிப்பை எகிறச் செய்த இந்த போட்டியில் கேஷவ் மகாராஜ் சரியாக ஆடாமல் போயிருந்தால் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்து இருக்கும்.
இந்த நிலையில், வெற்றிக்கு பின் இன்ஸ்டாகிராமில் அந்த வெற்றித் தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்தார் கேஷவ் மகாராஜ். அந்த பதிவில், "கடவுளை நம்புகிறேன். எங்கள் வீரர்களிடம் இருந்து என்ன ஒரு சிறப்பான முடிவு. ஷம்சி மற்றும் எய்டன் மார்கிரம் செயல்பாடு அபாரமாக இருந்தது. ஜெய் ஸ்ரீ அனுமான்" எனக் கூறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா வீரர் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என கூறி இருப்பது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சார்பு ரசிகர்கள், கேஷவ் மகாராஜ் ஜெய் ஸ்ரீ அனுமான் என தன் பதிவில் கூறி இருப்பதை பாராட்டி வருகின்றனர். சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே போய்,. ஹிந்துவான கேஷவ் மகாராஜ், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறார் என இதை வேறு மாதிரி செய்தியாக பரப்பி வருகின்றனர்.