டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு அசாத்தியமான கேட்ச்சை பிடித்தார்.
அந்த பந்தை வேறு யாராக இருந்தாலும் தவற விட்டு இருப்பார்கள். ஆனால், குல்தீப் யாதவ் தன் கையில் இருந்து நழுவிய பந்தை பறந்து போய் பிடித்தார்.
அப்போது அருகில் ஓடி வந்த ரவீந்திர ஜடேஜா ஆடிப் போனார். பின் குல்தீப்பை கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து வந்தது.
அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பேட்டிங் செய்து வந்தார். அப்போது பும்ரா வீசிய பந்து அவுட்சைடு ஆஃப் திசையில் வந்தது. அந்த பந்தை ரஷித் கான் தூக்கி அடித்தார்.
பந்து குல்தீப் யாதவ் பீல்டிங் நின்று இருந்த இடத்துக்கு அருகே வந்தது. அப்போது ஜடேஜாவும் கேட்ச் பிடிக்க ஓடி வந்தார். ஆனால், குல்தீப் யாதவ் பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், கைகளில் இருந்து பந்து எகிறி வேறு பக்கம் சென்றது.
அதைக் கண்ட ஜடேஜா கேட்ச் வாய்ப்பு பறிபோனதாக எண்ணி பதறினார். ஆனால், குல்தீப் யாதவ் மேஜிக் போல திடீரென தான் இருந்த திசையில் இருந்து பந்து போன திசைக்கு பாய்ந்து பந்தை கேட்ச் பிடித்தார். ஒரு நொடியில் எல்லாம் நடந்து முடிந்தது.

குல்தீப் யாதவ் செய்த அந்த மேஜிக்கை பார்த்த ஜடேஜா, மகிழ்ச்சி தாங்க முடியாமல் அவரை கட்டிப் பிடித்து பாராட்டினார். ரஷித் கான் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 272 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 8 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.