மும்பை: உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருமுறை கூட 10 ரன்களை எட்டாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. இதில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளன. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி வடுவே இதுவரை ஆறாமல் உள்ள நிலையில், மீண்டும் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஃபார்ம் அபரிவிதமாக இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 594 ரன்களை விளாசியுள்ளார். விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் ஆடி வருவதோடு, இந்திய மண்ணில் விளையாடுவதும் கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் விராட் கோலி தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்று அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி சொதப்பி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதுவரை 3 உலகக்கோப்பை தொடரில்களின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடியுள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் விராட் கோலி. அதேபோல் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி திணறி வருவது தொடர்கதையாகிறது. கடைசியாக ஆடிய 3 உலகக்கோப்பை தொடர்களின் அரையிறுதி சுற்றிலும் விராட் கோலி வஹாப் ரியாஸ், ஜான்சன் மற்றும் போல்ட் என்று இடதுகை பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலி வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.