சென்னை : 2023 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சொன்ன வேடிக்கையான காரணத்தை சுட்டிக் காட்டி, ஆப்கானிஸ்தான் போட்டியிலும் அதனால் தான் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருக்கிறது என கிண்டல் செய்து இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வான்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அங்கே பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. மைதானத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவான பாடல்கள் ஒலித்தது. இடையே ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிர்ப்பை காட்டினர். ரசிகர்கள் இப்படி நடந்து கொண்டது சரியல்ல என்றாலும், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின் இதையெல்லாம் சுட்டிக் காட்டி இருந்தது சர்ச்சையானது.
அது மட்டுமின்றி மைதானத்தில் "தில் தில் பாகிஸ்தான்" பாடல் ஒலிக்கவில்லை. அது பாகிஸ்தான் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல் என கூறி இருந்தார் மிக்கி ஆர்தர். அதை பலரும் அப்போதே கிண்டல் செய்தனர். அந்த பாடல் ஒலிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஜெயிக்காதா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியிடமும், ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடந்தது. அதைக் குறிப்பிட்டு, "சென்னையில் நேற்று தில் தில் பாகிஸ்தான் பாடல் போடவில்லை என நினைக்கிறேன்" என பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அதுதான் காரணம் என்பது போல கிண்டல் செய்துள்ளார் மைக்கேல் வாகன்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65, இப்ராஹீம் சத்ரான் 87, ரஹ்மத் ஷா 77 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.