மும்பை : 2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணி என்றால் அது இந்தியா மட்டும் தான் பலம் வாய்ந்த நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளையெல்லாம் இந்திய அணி எளிதில் வீழ்த்தி விட்டது.
விளையாடிய எட்டு போட்டிகளும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹன், இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார். அதில் இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வி அடையவே இல்லை. அப்படி இந்தியா தோற்றால் என்னுடைய நண்பர் வசீம் ஜாஃபருக்கு ஒரு பரிசளிக்க நான் இப்போதே தயார் செய்து விட்டேன்.
என்னை கேட்டால் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டும் தான் வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் வசிம் ஜாபர் குறித்து பேசிய அவர், எனக்கு என்னவோ வசீம் ஜாஃபர் என்று ட்விட்டர் அக்கவுண்ட்டை வேறு ஒருவர் தான் இயக்குவதாக தெரிகிறது என்றும் கிண்டல் அடித்துள்ளார்.
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பலரும் சரி என்று கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதல் போட்டியில் மோதிய போது ஆஸ்திரேலியா பலம் குன்றி நம்பிக்கை இன்றி காணப்பட்டதாகவும் தற்போது அவர்கள் அசுர பலத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் மோதினால் அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்திய ரசிகர்கள் பொருத்தவரை 2003 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்கு பழித் தீர்க்கும் விதமாக இந்திய அணி இம்முறை வெற்றி பெறும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.