தரம்சாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மிக மோசமான முறையில் கீழே விழுந்தார்.
இந்தப் போட்டி நடந்த தரம்சாலா ஆடுகளத்தில் பீல்டிங் செய்யும் பகுதிகள் மோசமாக இருப்பதாக பலரும் புகார் கூறியும் பிசிசிஐ அது குறித்து கண்டு கொள்ளவில்லை.
இதுவரை தரம்சாலா மைதானத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் யாரேனும் ஒரு வீரர் கீழே வழுக்கி விழுந்து கொண்டே இருந்தனர்.
உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பே தரம்சாலா மைதானத்தில் அவுட்பீல்டு பகுதி மிக மோசமாக இருந்தன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அளித்த அறிக்கையில் அங்கு பூஞ்சை தொற்று இருப்பது பற்றி கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரை சமாளித்த பிசிசிஐ, அவுட்பீல்டு மோசமாக இருப்பதை குறித்து கண்டு கொள்ளவில்லை.

பொதுவாக கிரிக்கெட் மைதானத்தின் அவுட்பீல்டு பகுதியில் புற்கள் இருக்க வேண்டும். அதே சமயம், மண் பகுதி நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு வீரர் பீல்டிங் செய்ய ஓடி வரும் போது கீழே தடுமாறி விழாமல் இருக்க முடியும்.
மேலும். டைவ் அடித்து பீல்டிங் செய்யும் போது காயம் ஏற்படாமலும் இருக்கும். தரம்சாலாவில் மண் பகுதி ஈரப்பதத்துடன் உள்ளது. மேலும், புற்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் அந்த மைதானத்தில் ஆடிய பல அணிகளும் இதை பற்றி கூறி விட்டன.
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பந்து வீசிக் கொண்டு இருந்த போது 43வது ஓவரின் போது அந்த சம்பவம் நடந்தது. கம்மின்ஸ் வீசிய பந்தை நீஷம் அடித்தார். மிட்செல் மார்ஷ் பந்தை பீல்டிங் செய்ய ஓடி வந்த போது மைதானத்தில் வழுக்கி விழுந்தார்.
அவர் கை முட்டி மடங்கியது. மேலும், மைதானத்தில் இருந்து புற்கள் மண்ணுடன் மொத்தமாகப் பெயர்த்துக் கொண்டு வந்தது. அந்த இடத்தில் சிறிய பள்ளமே ஏற்பட்டு விட்டது. இந்த மோசமான சம்பவத்தில் இருந்து மிட்செல் மார்ஷ் காயமின்றி தப்பினார்.
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விழுந்ததை பார்த்த போது பலரும் அவருக்கு முட்டியில் மோசமான அடி ஏற்பட்டு இருக்கலாம் என நினைத்தனர். ஒரு வேளை அவருக்கு எலும்பு முறிவு போன்ற மோசமான காயம் ஏற்பட்டு இருந்தால், பிசிசிஐ கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும்.
உலகக்கோப்பை தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது மைதானம் இந்த நிலையில் இருப்பதை மற்ற நாட்டு ரசிகர்கள் பார்த்தால் அது இந்தியாவுக்கு தான் அவமானம். இந்தியா என்ற நாட்டின் அடையாளத்தை பயன்படுத்தும் பிசிசிஐ, அதை கொஞ்சமாவது தீவிரமாக எடுத்துக் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு காண முடியவில்லை என்றால் தரம்சாலாவில் நடக்கும் போட்டிகளை வேறு மைதானத்துக்கு மாற்ற வேண்டும்.