டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது சிராஜ் மிக மோசமாக பந்து வீசினார்.
அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அது கூட பரவாயில்லை. மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் எல்லாம் குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால், சிராஜ் மிக அதிகமாக ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

அவருடைய கிரிக்கெட் வாழ்வில் மோசமான பந்து வீச்சாக இது அமைந்தது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே ஆன போட்டியில் ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களை பும்ரா மற்றும் பாண்டியா வெளியேற்றினர். முதலில் பும்ராவுடன் சிராஜ் தான் பவுலிங் வீசினார்.
ஆனால், சிராஜ் முதலில் இருந்தே ரன்களை வாரிக் கொடுத்ததால் அவருக்கு அடுத்து ஷர்துல் தாக்குர் மற்றும் பாண்டியா பந்து வீச வந்தனர். பாண்டியாவை தொடர்ந்து, தாக்குர்-ம் விக்கெட் எடுத்தார்.
ஆனால், சிராஜ் எப்போது பந்தை பெற்றாலும் மிக மோசமாக பந்து வீசி ரன்களை கொடுத்துக் கொண்டே வந்தார். விக்கெட்டும் எடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் பேட்டிங் இன்னிங்க்ஸ் முடிவில் சிராஜ் 9 ஓவர்கள் வீசி 76 ரன்கள் கொடுத்து இருந்தார். அதன் சராசரி ஓவருக்கு 8.44 ரன்கள் ஆகும்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2019இல் 10 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்ததே சிராஜின் மோசமான பந்துவீச்சு. அதே பந்துவீச்சை சமன் செய்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சிராஜ் பந்து வீசியதை பார்த்து அவர் மீது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். விக்கெட் எடுக்காமல் போனாலும், ரன்களை குறைவாக கொடுத்து இருக்கலாமே என தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.
ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில் பெரும்பாலான ரன்களை சிராஜ் ஓவர்களிலேயே அந்த அணி எடுத்துள்ளது.