சென்னை : பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸை கோழை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. ஒரு கட்டத்தில் கடைசி விக்கெட்டுக்கு தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது பாகிஸ்தான் கடைசி விக்கெட்டை எடுத்து இருந்தால் போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம்.

விக்கெட் எடுக்க வேண்டி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களை முதலில் பயன்படுத்தினார். 47 ஓவர்களுடன் வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிந்தன. அடுத்து சுழற் பந்துவீச்சாளர்கள் உசாமா மிர் மற்றும் முகமது நவாஸ் மட்டுமே பந்து வீச முடியும் என்ற நிலை இருந்தது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது நவாஸ் கையில் பந்தை கொடுத்தார். தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் நவாஸ், 48வது ஓவரின் மூன்றாவது பந்தை எந்த சுழலும் இல்லாமல், தட்டையாக வீசினார். அதுவும் ஸ்டம்ப்புக்கு நேராக சென்றது பந்து. இந்த எளிதான பந்தில் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் கேஷவ் மகாராஜ் ஃபோர் அடித்து தன் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
முகமது நவாஸ் செய்த தவறால் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து செல்ல முடியாமல் போனது. பாபர் அசாம் அப்போதே அவரை கடுமையாக திட்டினார். இந்த நிலையில், போட்டிக்கு பின் தொலைக்காட்சியில் விவாதம் செய்த போது முகமது கைஃப் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
நவாஸ் குறித்து கைஃப் கூறுகையில், "இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் நவாஸ் ஒரு கோழையாக செயல்பட்டார். பாபர் அசாம், உசாமா மிர் வசம் பந்தை கொடுத்து இருக்கலாம். மிர் அதற்கு முன் எய்டன் மார்கிரம் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதனால் தான் பாகிஸ்தானுக்கு வெற்றிக்கான வாய்ப்பே கிடைத்தது. ஆனால், இங்கே நவாஸ் எப்படி மகாராஜுக்கு பந்து வீசி இருக்கிறார் என பாருங்கள். அவர் எளிதான ஃபோர் கொடுத்து, பாபர் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்" என்றார்.