சென்னை : ஐசிசி உலக கோப்பை தொடரில் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரன் கடுமையாக சாடி இருக்கிறார்.
இலங்கை அணியின் இந்த நிலைக்கு என்ன என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் அவருடைய ஒட்டுமொத்த கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இலங்கை அணி ரசிகர்களின் மனக்குமுறல்களை முரளிதரன் தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு காலத்தில் ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணி என்ற பெயரை பெற்ற இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் கூட தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை வீரர்கள் ஏன் இவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை குறித்து முரளிதரன் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். தற்போதயெல்லாம் இலங்கை அணி வீரர்கள் சரியான எண்ணத்தில் விளையாடுவதில்லை.
இதுதான் தோல்விக்கு காரணம். முன்பு நாங்கள் விளையாடும் போதெல்லாம் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு இருந்தது. அது தற்போது துளியும் இலங்கை அணி வீரர்களுக்கு இல்லை. அனைவரும் தற்போது பணத்திற்காக தான் விளையாடுகிறார்கள். நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மாறி பணத்தைத் தேடி வீரர்கள் செல்ல தொடங்கி விட்டார்கள்.
இப்போது ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் இலங்கை அணி வீரர்களுக்கு 25 லட்சம் இலங்கை காசுகள் சம்பளமாக கிடைக்கிறது. ஆனால் நான் 1992 ஆம் ஆண்டு விளையாடும்போது வெறும் 2000 ரூபாய் தான் இலங்கை காசு கிடைத்தது. ஆனால் நாங்கள் பணத்திற்காக விளையாடவில்லை. நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விளையாடினோம்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய பிறகுதான் எங்களுக்கு பணம் கிடைத்தது. தற்போது உள்ள இளைஞர்களுக்கு ஆரம்பத்திலே பணம் மீது நாட்டம் வந்து விட்டதால் அவர்கள் பேட்டிங்கை மறந்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பல வெளிநாட்டு தொடர்களில் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக அதை தேடி செல்கிறார்கள். நாட்டை அனைத்து வீரர்களும் விட்டுவிடுகிறார்கள்.
இதனால் தான் நான் சொல்கிறேன், இந்தியா இந்த விஷயத்தில் சிறப்பாக நடந்து கொள்கிறது. ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற விதியை அந்நாட்டு வீரர்களுக்கு இந்தியா விதித்து இருக்கிறது. இதே போல் ஒரு முடிவை இலங்கையும் கொண்டு வர வேண்டும். இலங்கை பிரிமீயர் லீக் தொடரில் மட்டும் தான் விளையாட வேண்டும், மற்ற தொடரில் விளையாட கூடாது என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள்.
இதன் மூலம் நாட்டுக்காகவும் உள்ளூர் லீக் தொடரிலும் விளையாட முடியும். நட்சத்திர வீரர்கள் பணத்திற்காக ஓய்வு பெற்று விடக்கூடாது என்பதற்காக இந்தியா தற்போது புதிய முடிவை ஒன்று கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் லீக் தொடரில் விளையாட முடியும். இதே போல் அனைத்து நாடுகளும் கொண்டுவர வேண்டும். நாட்டை மனதில் வைத்து விளையாடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். இலங்கை அணியின் செயல்பாடு என் மனதுக்கு அவ்வளவு வலியை தருகிறது என்று முரளிதரன் கூறியுள்ளார்.