லக்னோ : நெதர்லாந்து அணி வீர்கள் ரன் குவிக்க முடியாத அழுத்தத்தில், ரன் அவுட் ஆகி 4 விக்கெட்களை பறி கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சில் திறமையானது என்பதால் நெதர்லாந்து அணி முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான் உள்ளிட்ட சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் நிதானமாக ஆடினர்.
அதனால் நெதர்லாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. முதல் ஓவரில் துவக்க வீரர் வெஸ்லி ஆட்டமிழந்த பின் ஒரளவு ரன் சேர்த்து வந்த மேக்ஸ் ஓடோ 42 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் ஓடும் போது தவறு செய்து ரன் அவுட் ஆனார்.
அடுத்து 19வது ஓவரில் கோலின் ஆக்கர்மேன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதன் பின் தொடர்ச்சியாக விக்கெட்டை இழக்கத் துவங்கியது நெதர்லாந்து அணி. இதனிடையே அரைசதம் அடித்த சைபிரன்ட் திடீரென ரன் அவுட் ஆனார்.
நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் நான்கு வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள். ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சு மூலம் கொடுத்த அழுத்தம், நேரடியாக 6 விக்கெட்களையும், அவர்களை பதற்றமாக்கி ரன் அவுட் ஆக வைத்து 4 விக்கெட்களையும் வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 9.3 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் சாய்த்தார். நூர் அஹ்மத் 2, முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் விக்கெட் வீழ்த்தாத போதும் 10 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய நிலையில், அதில் ஐந்து பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 4 ரன்களுக்கும் குறைவாக ரன் கொடுத்து இருந்தனர். இதுவே நெதர்லாந்து வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.