லக்னோ : நெதர்லாந்து - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் ஆடியதால், இலங்கை அணி போராடி வென்றது.

இந்த நிலையில், நெதர்லாந்து அணியையும் இலங்கை வீழ்த்தவில்லை என்றால், இந்த தொடரில் அந்த அணியால் வேறு எந்த அணியையும் வீழ்த்த முடியாது என்ற விமர்சனம் போட்டி துவங்கும் முன்பே இருந்தது.
இப்படி இலங்கை மீதான எதிர்பார்ப்பில் துவங்கிய இந்தப் போட்டியில், நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், பின் வரிசை வீரர்கள் சைபிரன்ட் 70 ரன்களும், லோகன் வான் பீக் 59ரன்களும் குவிக்கவே, நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியின் ரஜிதா 4, மதுசங்கா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். பவுலிங்கில் விக்கெட் வீழ்த்தினாலும், கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணியின் றேன் குவிப்பை கட்டுப்படுத்த தவறியது இலங்கை பவுலிங்.
லக்னோ ஆடுகளத்தில் கொஞ்சம் சிக்கலான 263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது இலங்கை அணி. துவக்க வீரர் குசால் பெரேரா 5 ரன்களிலும், அடுத்து வந்த குசால் மென்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், துவக்க வீரர் பதும் நிசங்கா 54 ரன்கள் குவித்தார்.
நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சதீரா சமரவிக்ரமா கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று ஆடினார். அவருக்கு அடுத்து அசலங்கா 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசலங்கா ஆட்டமிழக்கும் போது இலங்கை 32.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது வெற்றிக்கு 82 ரன்கள் இருந்த நிலையில், நெதர்லாந்து அணி தங்கள் பந்துவீச்சில் மிரட்டியது. ரன் எடுக்க முடியாமல் தவித்தார் சமரவிக்ரமா.

அப்போது தனஞ்செயா டி சில்வா 46வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து அணியின் அழுத்தத்தை குறைத்தார். அது மட்டும் நடக்காமல் போயிருந்தால் இலங்கை இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்காது என்றே கூறலாம். டி சில்வாவும் 30 ரன்கள் எடுத்து அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
சமரவிக்ரமா கடைசி வரை நின்று ஆடி 48.2 ஓவரில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து இருந்தார். இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் ஆடியது பாராட்டுக்கு உரிய ஆட்டமாக இருந்தது.