கொல்கத்தா : உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியின் போது இந்திய அணி 2 ஓவர்களில் சொதப்பினால் கூட நிலை குலைந்து விடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் எச்சரித்து இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா இதுவரை எட்டு போட்டிகளில் ஆடி எட்டிலும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் எந்த பெரிய பலவீனத்தையும் சுட்டிக் காட்ட முடியாத நிலையில் உள்ளது இந்திய அணி. அரை இறுதிச் சுற்றுக்கும் இந்தியா முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது என்ற நிலை உள்ளது. இந்திய அணியும் எந்த பலவீனமும் இல்லை என்ற தன்னம்பிக்கையுடன் உள்ளது. இந்த நிலையில், அரை இறுதியில் வேறு ஒரு அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்தார் மிஸ்பா உல் ஹக்.

இந்தியா லீக் சுற்றில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால், அரை இறுதியில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் தவறு செய்து அழுத்தத்தை சந்தித்தால் மற்ற அணிகளை விட அதிகம் இழக்க நேரிடும். காரணம், தற்போது இந்தியா என்றால் ஒரு பெரிய அணி என்ற நிலை உள்ளது. அதுவே பெரிய அழுத்தம். அதனால், இந்தியா இரண்டு ஓவர்களில் தவறு செய்தால் கூட நிறைய இழக்க நேரிடும் என்றார் மிஸ்பா.
இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. இந்திய அணி 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் லீக் சுற்றில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், அரை இறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அதே போன்ற நிலை இப்போது வராது என இந்திய ரசிகர்களால் அதிகம் நம்பப்படுகிறது.
இது பற்றி மிஸ்பா கூறுகையில், "ஒரு விஷயத்தை உறுதியாக கூறலாம். இது லீக் சுற்று. அதில் அவர்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அடுத்து அவர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல வேண்டும். ஒரு அணி நன்றாக ஆட ஆட, கோப்பை வெல்லப் போகும் அணி என்ற இடத்தை அடையும் போது அந்த அணியின் மீதான அழுத்தமும் அதிகரிக்கும். அப்படி இருக்கும் போது அந்த அணி போட்டியில் 1 - 2 ஓவர்கள் அழுத்தத்தை சந்தித்தால் அவர்கள் நிறைய இழப்பை சந்திக்க நேரிடும். அதனால், மற்ற அணிகளுக்கு இந்த வகையில் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது." என்றார் மிஸ்பா உல் ஹக்.
மேலும், "ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு எப்போதும் கடினமாக இருப்பார்கள். ஆனால், மற்ற அணிகள் மனதளவில் இந்திய அணி குறித்து இருக்கும் தயக்கத்தை உடைத்து வெளியே வர வேண்டும். இந்தியா தொடரில் மிக நன்றாக ஆடி மற்ற அணிகள் மனதில் அழுத்தத்தை விதைத்து இப்போதே 50 சதவீத போட்டியை வென்று விட்டார்கள். அதனால், மற்ற அணிகள் இந்த அழுத்தத்தை உடைக்க முடியும் என மனதளவில் நம்ப வேண்டும்" என்றார் மிஸ்பா உல் ஹக்.