சென்னை : சென்னை சேப்பாக்கம் பிட்ச் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்து ஒட்டுமொத்த 2023 உலகக்கோப்பை தொடரிலேயே ஒரு சிறந்த போட்டியை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறது.
அந்த அளவுக்கு அங்கு நடந்த பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் பல திருப்பங்கள் நடந்தன.
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டி கடைசி நிமிடத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்றே முடிவு செய்ய முடியாத அளவுக்கு சுவாரசியமாக இருந்தது. இதற்கு காரணம், சேப்பாக்கம் பிட்ச் தான். பாகிஸ்தான் வெல்வது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி துவக்கத்தில் பெரிய இலக்கை நோக்கி ஆடுவது போலத் தோன்றினாலும், 39 ஓவர்களுக்கு பின் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற இடத்தில் இருந்து மேலும் ஐந்து விக்கெட்களை இழந்து, 270 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது. அதே சமயம், அங்கு ரன் குவிக்க வாய்ப்பில்லை எனவும் சொல்ல முடியாது. பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த அதே சமயம், பந்துவீச்சுக்கும் சரி சமமாக ஒத்துழைத்தது. அதன் காரணமாகவே 300 ரன் குவிக்க வேண்டிய பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போதும் இதே தான் நடந்தது. 36 ஓவர்களுக்கு பின் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா அடுத்த 36 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து 46வது ஓவரில் தான் இலக்கை எட்டியது. வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் பிட்ச்சை புரிந்து கொள்வது மிகவும் கடினம் தோனி போன்ற அனுபவ கேப்டன்களுக்கே சவாலான பிட்ச் இது. ஐபிஎல் தொடரில் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்யும் போது சென்னையில் ஆடும் போட்டிகளுக்கு தனியாகவும், மற்ற மைதானங்களில் ஆடுவதற்கு தனியாகவும் என சில வீரர்களை வைத்திருப்பார்.
அதே போல, பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளும் இந்தப் போட்டியில் பல்வேறு மாற்றங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மாற்றங்களை செய்த அந்த அணிகள், இரண்டுமே பேட்டிங்கில் கோட்டை விட்டன. ஆனால், இதயத் துடிப்பை எகிற வைத்த போட்டியை அளித்து, சேப்பாக்கம் பிட்ச் எப்போதுமே சவாலானது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது.