சென்னை : 2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா சேஸிங் செய்த போது 9 விக்கெட்களை இழந்த நிலையில், கடைசி ஒரு விக்கெட்டை வைத்து இலக்கை எட்டியது. அந்த கடைசி நிமிடங்கள் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தின.

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 9, இமாம் உல் ஹக் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாபர் அசாம் நிதான ஆட்டம் ஆட, மறுபுறம் ரிஸ்வான் 31, இப்திகார் 21 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். பாபர் அசாம் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வந்த சவுது ஷகீல் பொறுப்பாக ஆடி 52 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். ஷதாப் கான் அதிரடி ஆட்டம் ஆடி 36 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். முகமது நவாஸ் 24 ரன்கள் சேர்த்தார். மற்ற பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
சென்னையில் இது நல்ல ஸ்கோர் என்பதால் நம்பிக்கையுடன் அடுத்து பந்து வீச வந்தது பாகிஸ்தான். தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் டி காக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டெம்பா பவுமா 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டஸ்ஸன் நிதான ஆட்டம் ஆடி 39 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிரம் நிலைத்து நின்று ஆடிய நிலையில், கிளாசன் 12, மில்லர் 29, ஜான்சென் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மார்கிரம் தனி ஆளாக தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார். எனினும், அவர் தென்னாப்பிரிக்கா 250 ரன்கள் எடுத்த நிலையில் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 10 ரன்கள் எடுத்த கோட்ஸி ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா விக்கெட்களை இழந்து பயம் காட்டியது.
இந்த தருணத்தில் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாகிஸ்தான் அணி ஷஹீன் ஷா அப்ரிடியை தொடர்ந்து ஓவர் வீச வைத்தது. ஆனாலும் அவர் தன் கடைசி ஓவரில் விக்கெட் வீழ்த்தவில்லை. அதனால், பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அடைந்தது. களத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகராஜ் பேட்டிங் திறன் கொண்டவர் என்பதால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடும் வேலையில் இறங்கினார் லுங்கி நிகிடி.
இருவரும் பவுண்டரி அடிக்க ஆசைப்படாமல், 53 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்ததால் சிங்கிள் ரன்களாக மிக நிதானமாக எடுத்தனர். லுங்கி நிகிடி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் ரௌப் வீசிய 46வது ஓவரில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

அடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஷம்சி களமிறங்கினார். கேசவ் மகராஜ் - ஷம்சி இணைந்து ரன்களை எடுக்கும் முன் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இரண்டு வைடுகளை போட்டு ரன்களை கொடுத்தனர். 47வது ஓவருடன் வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களும் முடிவுக்கு வந்தன.
48வது ஓவரில் மகாராஜ் ஒரு ஃபோர் அடித்து தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். பாகிஸ்தான் அணி உண்மையிலேயே இந்த உலகக்கோப்பையில் தன் போராட்டத்தை வெளிப்படுத்திய போட்டி என்ற ஆறுதலுடன் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.