சென்னை : பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது.
தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கடந்த இரண்டு போட்டிகளில் மோசமான உடல்நலம் காரணமாக பங்கேற்காத நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

அதற்கு என்ன முக்கிய காரணம் என்பதையும் கூறினார். சென்னை பிட்ச் நன்றாக உள்ளது. இங்கே நான் பேட்டிங் செய்ய வேண்டும் எனக் கூறினார். டெம்பா பவுமா நிதான ஆட்டம் ஆடுவதில் திறமையான பேட்ஸ்மேன். எனவே, பாகிஸ்தான் அணிக்கு அவர் கடும் நெருக்கடி கொடுக்கவே அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் அணி ஐந்து போட்டியில் மூன்று தோல்விகளை சந்தித்து அரை இறுதி வாய்ப்பை மோசமாக மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்காது என தெரிகிறது. சென்னை பிட்ச்சுக்கு ஏற்ப தென்னாப்பிரிக்க அணி மூன்று மாற்றங்களை செய்துள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன் பின் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், "இனி எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியம் அதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எல்லா விதத்திலும் நாங்கள் முன்னேற வேண்டும். குறிப்பாக பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் அணியாக ஒன்றாக நின்று, எப்படி சிறப்பாக செயல்படலாம் என பேச வேண்டும்." என்றார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பேசுகையில், "நான் இங்கே நிச்சயம் பேட்டிங் செய்வேன். நல்ல பிட்ச் போல தெரிகிறது. இதே போலவே கடினமான பிட்ச் ஆக இது இருக்கும் என நம்புகிறேன். இங்கே எப்படி ஆட வேண்டும் என நாங்கள் விரைவில் தெரிந்து கொள்ள வேண்டும்." என சென்னை பிட்ச் குறித்து குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வசீம் ஜூனியர் சேர்க்கப்பட்டார். சுழற் பந்துவீச்சில் உசாமா மிர் நீக்கப்பட்டு, முகமது நவாஸ் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்கா அணியில் காகிசோ ரபாடா, ஹென்ரிக்ஸ், லிசாட் வில்லியம்ஸ் நீக்கப்பட்டு, லுங்கி நிகிடி, டெம்பா பவுமா, தாப்ரிஸ் ஷம்ஷி அணிக்கு திரும்பினர்.