பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் சதம் அடித்துள்ள நிலையில், அதில் ஒரு வீரருக்கு மட்டும் 10 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அந்த அணியில் புகைச்சல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணியில் பல விரிசல்கள், நிர்வாக ரீதியான பிரச்சனைகள் நடந்து முடிந்து, பல தோல்விகளுக்கு பின் உலகக்கோப்பை தொடரில் இப்போது தான் அந்த அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதற்குள் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஃபாக்கர் ஜமானுக்கு பரிசை அறிவித்து அடுத்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜாகா அஷ்ரப் தொடங்கி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வரும் முன்பே அந்த அணியில் விரிசல் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. நிர்வாக ரீதியாகவும் தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் குழு, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் கேப்டன் பாபர் அசாம் என நான்கு தரப்புக்கும் இடையே பல்வேறு முட்டல், மோதல்கள் நடந்து வந்தன.

இதில் ஒரு பகுதியாக இன்சமாம் உல் ஹக் தன் மீது நிர்வாக ரீதியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றை காரணமாகக் காட்டி பதவி விலகினார். இதனிடையே பாகிஸ்தான் அணி ஏழு லீக் போட்டிகளில் நான்கு தோல்விகளை தழுவி அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என போராடிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தான் துவக்க வீரர் ஃபாக்கர் ஜமான், நியூசிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 402 ரன்களை சேஸிங் செய்த போது 63 பந்துகளில் சதம் அடித்து மழையால் தடைபட்ட போட்டியில் டிஎல்எஸ் முறையில் பாகிஸ்தான் வெற்றி பெற காரணமாக இருந்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 பந்துகளில் 126 ரன்கள் குவித்து இருந்தார். இந்தப் போட்டியில் 11 சிக்ஸ் அடித்து இருந்தார்.
போட்டியில் பாகிஸ்தான் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற ஃபாக்கர் ஜமான் முக்கிய காரணமாக இருந்தார். போட்டி முடிந்த உடன் அவரிடம் தொலைபேசியில் பேசிய ஜாகா அஷ்ரப் அவரை வாழ்த்திய கையோடு, அவருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 10 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்தார்.
ஏற்கனவே, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் சதம் அடித்து இருந்தனர். அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் பெரிய வெற்றியை பெற்று இருந்தது.
ஜமானுக்கு சதம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்ததற்கு பரிசு அளித்தால், மற்ற இரண்டு சதம் அடித்த வீரர்களுக்கும் பரிசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டதால் பாகிஸ்தான் அணியில் புகைச்சல் எழுந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நான்கு போட்டிகளிலும் ஃபாக்கர் ஜமான் அணியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்சமாம் உல் ஹக் தேர்வுக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின் தான் ஃபாக்கர் ஜமானுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் 81 ரன்கள் எடுத்தார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 126 ரன்கள் குவித்த நிலையில் தான் அவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை ஒதுக்கி வைத்ததிலும், தற்போது பரிசு அளிப்பதிலும் கிரிக்கெட் அரசியல் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.