கொல்கத்தா : 2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி நெருங்கி விட்ட நிலையில். பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு வந்தால் தான் அந்த அரை இறுதிப் போட்டி பெரிதாக இருக்கும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோதினால் அது பெரிதாக இருக்கும் என சவுரவ் கங்குலி கூற வேறு ஒரு தனிப்பட்ட நோக்கமும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் தற்போது இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.

நான்காவது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். அது சாத்தியம் அற்றது என்ற நிலையில் நியூசிலாந்து கிட்டத்தட்ட தன் அரை இறுதி இடத்தை உறுதி செய்து விட்டது.
கங்குலி சொல்வது போல ஒரு வேளை பாகிஸ்தான் அணி அசாத்தியமான முறையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றால் அரை இறுதிப் போட்டி நடக்கும் இடம் மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஐசிசி உலகக்கோப்பை அட்டவணையின்படி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகள் மும்பையில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் கொல்கத்தாவில் மோதும்.
ஆனால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதி கங்குலியின் அண்ணன் தலைவராக இருக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மற்றொரு அரை இறுதி மும்பைக்கு மாற்றப்படலாம். இதற்கு காரணம், மும்பையை விட, கொல்கத்தாவில் அதிக ரசிகர்கள் நேரில் போட்டியை காணலாம் என்பது தான்.