அகமதாபாத் : பாகிஸ்தான் அணியில் விரிசல் எழத் துவங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகத்திடம் இருந்தே செய்தி கசிந்துள்ளது.
இந்த விரிசல் வீரர்களிடம் எழவில்லை. மாறாக பயிற்சியாளர்கள் குழுவிற்கும் - தேர்வுக் குழு தலைவரும் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டனும் ஆன இன்சமாம் உல் ஹக் இடையே எழுந்துள்ளது.

இன்சமாம் உல் ஹக் தான் அணியில் அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும், இதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அரசியலுக்குள் சிக்கித் தவித்து வருகிறது பயிற்சியாளர்கள் குழு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தற்போது பாகிஸ்தான் அணியின் இயக்குனராக இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அரசியல் அணிக்குள் வரக் கூடாது என்பதால் அவர் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் பயிற்சியாளர் குழுவில் சேர்க்காமல், தனது நாடான தென்னாப்பிரிக்காவில் இருந்து கிராண்ட் பிராட்பர்ன் (தலைமை பயிற்சியாளர்), ஆண்ட்ரூ புட்டிக் (பேட்டிங் பயிற்சியாளர்), மோர்னே மோர்கல் (பவுலிங் பயிற்சியாளர்) ஆகிய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாக நியமித்து இருக்கிறார். அதற்கு அப்போது இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவருக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தது.
ஆனால், முன்பு இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகள் இப்போது மாறி விட்டார்கள். புதிய நிர்வாகிகள் பதவிகளில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இருக்க விரும்புவதாகக் கூறி புதிய நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றார்.
நேராக இந்தியா வந்த இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை போட்டிகளில் யாரை களமிறக்க வேண்டும், எந்த 11 வீரர்கள் ஆட வேண்டும் என கூறத் துவங்கி இருக்கிறார். இது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆலோசித்து செய்ய வேண்டிய பணி. ஆனால், அதில் தலையிட்டு இருக்கிறார் இன்சமாம் உல் ஹக்.
தேர்வுக் குழு தலைவராக மட்டுமின்றி, இன்சமாம் உல் ஹக்கிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் நல்ல செல்வாக்கு உள்ளது. வீரர்கள் மத்தியிலும் அவர் மீது மதிப்பு உள்ளது. அதனால், அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு திணறி வருகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் இன்சமாம் உல் ஹக் தலையிடுகிறார் எனக் கூறினால் அது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் ரகசியமாக தங்கள் புகாரை கூறி இருக்கிறது பயிற்சியாளர் குழு. அடுத்து இந்தியா உடனான போட்டி இருக்கும் நிலையில் இன்சமாம் உல் ஹக் தனது அதிகாரத்தை அணியில் பயன்படுத்தி அந்தப் போட்டிக்கும் யார் யார் ஆட வேண்டும் என கூறுவார் என்றே கருதப்படுகிறது.