ஹைதராபாத் : இந்தியா உடனான முக்கியமான உலகக்கோப்பை போட்டிக்கு கிளம்பும் முன் பாகிஸ்தான் வீரர்கள், ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்று ஆசை தீர சாப்பிட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே, "ஜுவல் ஆஃப் நிஜாம்" என்ற பிரபல ஹோட்டலுக்கு சென்று பாகிஸ்தான் வீரர்கள் அசைவு உணவுகளை ஒரு கட்டு கட்டியது தேசிய அளவில் டிரெண்டு ஆனது.

பாகிஸ்தான் அணி ஹைதரபாத்தில் தான் தங்களின் இரண்டு பயிற்சிப் போட்டிகள் மற்றும் முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றது. ஹைதராபாத்தில் இருந்து கிளம்பும் முன் கடைசியாக பெஷாவர் ரெஸ்டாரன்ட் சென்று இருக்கிறார்கள். அங்கே என்னென்ன உணவுகளை அவர்கள் விரும்பினார்கள் என அந்த உணவகத்தின் உரிமையாளரே கூறி இருக்கிறார்.
அடுத்து அந்த அணி இந்தியா உடன் மோதும் போட்டிக்காக அகமதாபாத் சென்றுள்ளது. அதற்கு முன் ஹைதரபாத்தில் உள்ள
பெஷாவர் ரெஸ்டாரன்ட் என்ற அந்த உணவகத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
பிரியாணி மட்டுமில்லாமல் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அசைவ உணவுகள் அங்கு கிடைக்கும். கபாப், திக்கா, கடாய் போன்ற உணவுகள் நன்றாக இருக்கும் என்ற பெயர் பெற்றதாலும், பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் சமைக்கும் முறையில் உணவுகளை தயார் செய்வதாலும், பாகிஸ்தான் வீரர்கள் அதை ருசித்துப் பார்க்க சென்று இருக்கிறார்கள்.

இந்த ரெஸ்டாரன்ட் பற்றி கேள்விப்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் நேரில் சென்றது மட்டுமில்லாமல், பார்சலும் வாங்கிச் சென்றதாக அந்த உரிமையாளர் கூறினார். மேலும், தங்கள் ஹோட்டலில் இருந்தே ஆர்டர் செய்தும் இருக்கிறார்கள். உணவின் ருசி நன்றாக இருக்கவே, மீண்டும், மீண்டும் ஆர்டர் வந்துள்ளது.
குறிப்பாக சார்ஸி திக்கா என்ற உணவைத் தான் பாகிஸ்தான் வீரர்கள் முதலில் மிகவும் விரும்பி உண்டு இருக்கிறார்கள். அப்படியே மற்ற உணவுகளையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்கள்.
அதில் முக்கியமானது சாப்ளி கபாப் என்ற அசைவ உணவு. பிரியாணியை விட கபாப் நன்றாக இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் அதையும் அங்கே விரும்பி உண்டு இருக்கிறார்கள். அதைத் தவிர சார்ஸி திக்கா, சிக்கன் கடாய், மட்டன் கடாய், மட்டன் பிரியாணியை விரும்பி உண்டு இருக்கிறார்கள்.

அந்த உணவகத்தின் உரிமையாளர் முதலில் பாகிஸ்தான் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்து விட்டாராம். ஆனால், பணம் வாங்கினால் தான் பார்சலை வாங்கிக் கொள்வோம் எனக் கூறி கட்டாயப்படுத்தி பணம் கொடுத்து இருக்கிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.
பாகிஸ்தான் வீரர்கள் உலகக்கோப்பை ஆட வந்தார்களா? இல்லை சாப்பிட வந்தார்களா? என சந்தேகமே வந்து விடும் போல. இதில் மற்றுமொரு விஷயம், இந்தியா உடனான போட்டியில் தோல்வி அடைந்தால் இதை வைத்தே ரசிகர்கள் அவர்களை உண்டு இல்லை என செய்து விடுவார்கள்.