மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இன்னும் ஒரு லீக் ஆட்டம் தான் நடைபெற இருக்கிறது. அதாவது இந்தியாவும் நெதர்லாந்தும் ஞாயிற்றுக்கிழமை பல பரிட்சை நடத்துகிறது. இதில் இந்திய அணி தோல்வியை தழுவினால் நெதர்லாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்த எட்டு அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வங்கதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. எனினும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன் ரேட்டில் தென்னாப்பிரிக்காவை முந்த வேண்டும் என ஆஸ்திரேலியா கணக்கு போட்டது. அது நடைபெறவில்லை.
இதன் மூலம் இந்திய அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 14 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகள் உடன் 0.84 என்ற ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்திலும் நியூசிலாந்து அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், வங்கதேசம் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் இருக்கிறது.
இலங்கை மற்றும் நெதர்லாந்து முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தப் பட்டியில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இதில் நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் எட்டாவது இடத்தில் உள்ள வங்கதேசம் அணி தன்னுடைய சாம்பியன்ஸ் கோப்பை கனவை தக்க வைத்துக் கொள்ளும். ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்க்கு செல்லும். கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நாளைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.