டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் மிக வேகமாக ரன் குவித்தது. 35 ஓவர்களில் எல்லாம் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா எட்டியது. ஆனாலும், நியூசிலாந்து அணியை முந்த முடியாமல் இந்தியா இரண்டாம் இடத்தையே பிடித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றி மூலம் இரண்டு புள்ளிகளும், ஆஸ்திரேலியா போட்டியில்கிடைத்த வெற்றி மூலம் இரண்டு புள்ளிகளும் பெற்று, மொத்தம் நான்கு புள்ளிகள் கிடைத்தாலும், அதிக நெட் ரன் ரேட் பெற்றால் தான் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை முந்தி இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியும்.
அதை மனதில் வைத்தே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 273 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அடித்த அந்த இலக்கை, இந்தியா குறைந்த ஓவர்களில் எடுத்தால் நியூசிலாந்து அணியை முந்தி அதிக நெட் ரன் ரேட் பெறலாம் என்ற நிலை இருந்தது.
நியூசிலாந்து அணி 1.958 நெட் ரன் ரேட் வைத்துள்ளது. அதை குறி வைத்து ஆடிய இந்திய அணி 35 ஓவர்களில் 273 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. அதன் மூலம், இந்தியா தற்போது 1.5 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் 5 ஓவர்களுக்கு முன்னதாக இந்தியா வெற்றி இலக்கை எட்டி இருந்தால் நியூசிலாந்து அணியை முந்தி இருக்கலாம். ஆனால், அது முடியாமல் போனது.
நியூசிலாந்து அணி மற்றும் இந்திய அணி இரண்டுமே இரண்டு வெற்றிகள் பெற்றாலும் நியூசிலாந்து முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் அணியும் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளது அந்த அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.927 ஆகும். நான்காம் இடத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று உள்ளது. ஆனால், அந்த அணி இப்போதே 2.04 நெட் ரன் ரேட் வைத்துள்ளது. ஆக, இனி இந்த உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் நெட் ரன் ரேட்டுக்கு தான் அதிக போட்டி இருக்கப் போகிறது.