இதுல நம்ம ஊரை அடிச்சுக்கவே முடியாது.. பாட்டி செய்ததை பார்த்து வியந்து போன நியூசிலாந்து வீரர் ரச்சின்
பெங்களூர் : நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு சென்ற போது அவர் செய்ததை பார்த்து வியந்து போய் அமர்ந்து இருந்தார்.
2023 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றார் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா. அவரது தந்தை பெங்களூரை சேர்ந்தவர். பின்னர் அவர் நியூசிலாந்தில் குடி பெயர்ந்தார். அங்கு பிறந்த ரச்சின் ரவீந்திரா தன் தந்தையின் கிரிக்கெட் ஆர்வம் காரணமாக தானும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்று நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை நாயகனாக வலம் வருகிறார்.

தற்போது 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரச்சின் ரவீந்திரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 9 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் ஆடி 3 சதம், 2 அரைசதம் உட்பட மொத்தம் 565 ரன்கள் குவித்துள்ளார். அவரது உலகக்கோப்பை பேட்டிங் சராசரி 70.62 ஆகும்.
இந்த நிலையில், அவரது பூர்வீக நகரமான பெங்களூரில் அவர் இரண்டு போட்டிகளில் ஆடினார். கடைசியாக நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த போட்டியும் பெங்களூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் 34 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். அவர் பேட்டிங் செய்த போது தங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ரசிகர்கள் "ரச்சின், ரச்சின்" என அவரது பெயரை கூறி உற்சாகம் செய்தனர்.
அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரை இறுதிக்கு கிட்டத்தட்ட முன்னேறி விட்ட நிலையில், ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கே அவரது பாட்டி அவர்கள் பாரம்பரிய முறைப்படி அவருக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார். அதைப் ரச்சின் சற்று வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.
தென்னிந்தியாவில் திருஷ்டி சுற்றிப் போடும் வழக்கம் உள்ளது. தற்போது மொத்த இந்தியாவும் இந்திய அணியின் வெற்றியை எப்படி பார்க்கிறதோ, அதே போலவே ரச்சின் ரவீந்திராவையும் பார்க்கிறது. இன்னும் சிலர் சச்சின் டெண்டுல்கருடன் அவரை ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி ஊரே தன் பேரனை பாராட்டி வரும் நிலையில், அவரது பாட்டி அவருக்கு திருஷ்டி சுற்றி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரை இணைத்தே அவருக்கு ரச்சின் என அவர் தந்தை பெயரிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்ப அவரும் மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக இப்போதே மாறி இருக்கிறார். நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக ரச்சின் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications