மும்பை : முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வெல்லாமல் தவறவிட்டால் இனி மூன்று உலகக்கோப்பைகளுக்கு கோப்பை வெல்வதை பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முறை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடி வரும் நிலையில், இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லாமல், வாய்ப்பை தவறவிட்டால் அது மோசமானதாக இருக்கும் என அவர் கூறி இருக்கிறார்.

இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியா தற்போது 2023இல் உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக கருதப்படுகிறது.
தற்போது இந்திய அணி வலுவாக உள்ளது, அதே சமயம், சமநிலை கொண்ட அணியாகவும் உள்ளது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளையும் ஆதிக்கம் செலுத்தி வென்றுள்ளது. இந்த முறை உலகக்கோப்பையை தவறவிட்டால் அதை விட மோசமான ஒரு விஷயம் எதுவுமே இருக்க முடியாது. அதே சமயம், அடுத்த வாய்ப்பு எப்போது வரும் என்பதை பற்றித் தான் ரவி சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு கொண்ட அணியாக மாற சில காலம் எடுத்துக் கொள்ளும். அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் கலந்த சரி சமமான அணி அமைய வேண்டும். அது 2011இல் அமைந்தது. அதன் பின் இப்போது அமைந்துள்ளது. இப்போது உலகக்கோப்பையை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பைகளுக்கு அது போன்ற அணி அமையாது என்பதை தான் ரவி சாஸ்திரி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ரவி சாஸ்திரி இது பற்றி பேசிய போது, "இந்த நாடு வெறித்தனமாக காத்துக் கொண்டு இருக்கிறது. கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன் தான் உலகக்கோப்பை வென்று இருக்கிறார்கள். அதை மீண்டும் வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணி ஆடுவதை வைத்துப் பார்க்கும் போது இது தான் அவர்களின் சிறந்த வாய்ப்பு என தோன்றுகிறது." என்றார்,
மேலும், "இந்த முறை அவர்கள் தவறவிட்டால், அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடர்களை வெல்வது பற்றி அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த அணியின் 7 - 8 வீரர்கள் தங்கள் உச்சகட்ட ஆட்டத்தை ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கக் கூடும். இந்திய அணி ஆடுவதை வைத்தும், சூழ்நிலைகளை வைத்தும் பார்த்தால், இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கு தேவையான அணி இருக்கிறது." என்று கூறினார் ரவி சாஸ்திரி.