பெங்களூர் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்கு காரணமே மழை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் செய்த தவறு தான்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், உச்ககட்ட பார்மில் இருக்கும் பாக்கர் ஜமான் சூழ்நிலையை சரியாக உணர்ந்து கேன் வில்லியம்சன் செய்த தவறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மழையின் உதவியையும் பெற்று வெற்றி பெற்றனர். என்ன நடந்தது?

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சிறியது என்பதால் எளிதாக ரன்கள் குவிக்கலாம். அதை பயன்படுத்தி நியூசிலாந்து அணி 50 ஓவரில் 401 ரன்கள் குவித்தது.
அடுத்து பாகிஸ்தான் அணி தடுமாறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 4 ரன்களில் ஆட்டமிழந்த பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், பாக்கர் ஜமான் ஜோடி நியூசிலாந்து அணியை பந்தாடியது.
ஜமான் அதிரடியாக 63 பந்துகளில் சதம் கடந்தார். பாபர் அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில், 21.3 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போது பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போதே பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து அணியை விட 10 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தது.
ஆனால், அப்போது மழை நின்று மீண்டும் போட்டி துவங்கியது. அப்போது பாகிஸ்தான் அணிக்கு 19.3 ஓவர்களில் 182 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சாளர்களின் ஓவர்களை அதற்கு ஏற்றவாறு குறைத்து பயன்படுத்த வேண்டும் என்ற சிக்கல் இருந்தது.
அதனால், சுழற் பந்துவீச்சாளர் இஷ் சோதிக்கு 23வது ஓவரை அளித்தார் கேன் வில்லியம்சன். அதற்கு முன் சோதி 2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். ஆனால், 23வது ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். பாபர் அசாம் - ஜமான் ஜோடி மீண்டும் மழை வந்தால் போட்டி நடப்பது சந்தேகம் என்பதால் டிஎல்எஸ் முறைப்படி வேகமாக ரன் குவித்து வெற்றிக்கு அருகே செல்ல வேண்டும் என முடிவு செய்து அந்த ஓவரிலேயே அதிக ரன்கள் எடுத்தனர்.
அப்போதாவது கேன் வில்லியம்சன் உஷாராகி இருக்க வேண்டும். ஆனால் மீண்டும் 25வது ஓவரை இஷ் சோதியிடமே அளித்தார் வில்லியம்சன், அந்த ஓவரில் மூன்று சிக்ஸ் அடித்து மொத்தம் 20 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி. சரியாக 25.3 ஓவரின் போது மீண்டும் மழை வந்தது. அதன் பின் போட்டி கைவிடப்பட்டது.
அப்போது பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இஷ் சோதியிடம் ஓவரை கொடுக்காமல் வேறு வேகப் பந்துவீச்சாளரிடம் அந்த 23 மற்றும் 25 வது ஓவர்களை கொடுத்து இருந்தால் நியூசிலாந்து அணி நிச்சயம் வெற்றிக்கு அருகே சென்று இருக்கலாம். அந்த வாய்ப்பை நழுவ விட்டார் கேன் வில்லியம்சன்.