டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.
இஷான் கிஷன் விராட் கோலி போன்றோர் கூட அத்தனை அதிரடி ஆட்டம் ஆடாமல் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவிலேயே ஆடினர். ஆனால், ரோஹித் சர்மா களத்தில் நின்ற போது அவர்கள் ரோஹித்துக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை தான் அதிகம் செய்தனர்.
ரோஹித் சர்மா ஒரு திட்டத்தோடு ஆடியதால் தான் இப்படி அவசர அவசரமாக அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.

இஷான் கிஷன், விராட் கோலி ஆகியோர் நிதான ஆட்டம் ஆடிய போதும் ரோஹித் சர்மா வெறி கொண்டது போல ஆட முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய ஆஸ்திரேலிய போட்டி வெற்றியுடன் சேர்த்து இந்தியா நான்கு புள்ளிகள் பெற்றுள்ளது.
ஆனால், அத்துடன் நெட் ரன் ரேட்டும் முக்கியம். அரை இறுதி செல்லும் நான்கு அணிகளை தேர்வு செய்யும் போது எந்த நான்கு அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளதோ அந்த நான்கு அணிகளுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.
அப்போது சில அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று இருந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும். அதனாலேயே முன்னெச்சரிக்கையாக ரோஹித் சர்மா இந்திய அணி அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதை ஒட்டியே ஆப்கானிஸ்தான் அணி 272 ரன்கள் குவித்த போதிலும் அதை விரைவாக எட்டும் வகையில் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். 16 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்தார் அவர்.
அடித்த சதம் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் முறியடித்தார். சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். அதே போல உலகக்கோப்பையில் ஏழு சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ரோஹித் சர்மா.
ரோஹித் ஆட்டமிழந்த பின் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடி வெற்றி தேடித் தந்தனர். அவர்கள் ரோஹித் போல அதிரடி ஆட்டம் ஆடாமல் போனாலும் இந்தியா 15 ஓவர்கள் மீதமிருக்கும் போதே சேஸிங்கை முடித்து அதிக நெட் ரன் ரேட் பெற்றது.