மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி, விராட் கோலிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே சமயம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து எந்த சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை. ஆனால், விராட் கோலி பற்றி இந்தியா போட்டி இல்லாத நாட்களில் கூட மற்ற நாடுகளின் போட்டிகளுக்கு இடையே சில சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகவே இந்த பாகுபாடு குறித்து ட்விட்டரில் ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். அது இப்போது இன்னும் பெரிய அளவில் வெடித்துள்ளது. ரோஹித் சர்மா ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றனர்.

அந்த தொலைக்காட்சியில் போட்டிகளுக்கு இடையே நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளில் விராட் கோலி குறித்து தொடர்ந்து பேசுவதாக முதல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து, கோலி ரசிகர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதாகவும், ஏன் பொதுவான இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அழைத்து இந்திய அணிக்காக நிகழ்ச்சி நடத்தாமல், வெறும் ஒரே ஒரு வீரருக்காக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது மற்றொரு புகாராக உள்ளது.
இது எல்லாவற்றையும் விட ஆஸ்திரேலியா - வங்கதேசம் போட்டி நடந்த போது இடைவேளையில் விராட் கோலி, வலைப் பயிற்சி செய்யும் வீடியோ காட்டப்பட்டது. அது குறித்து ரோஹித் சர்மா ரசிகர்கள் கேட்கும் கேள்வி, "கோலி மட்டும் தான் வலைப் பயிற்சி செய்கிறாரா? மற்ற இந்திய வீரர்கள் பயிற்சி செய்யவில்லையா? ஏன் அவர்களை காட்டவில்லை?" என்பது தான்.
ரோஹித் சர்மா ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார் என கம்பீர் பல மாதங்கள் முன்பு ஒரு செய்தி சேனலில் பேசிய வீடியோவை பரப்பி வருகின்றனர். அதில் கம்பீர், மற்ற நாடுகளில் ஒரு அணியை அணியாக பார்க்கின்றனர். ஆனால், இந்தியாவில் தனித் தனி வீரராக பார்க்கும் போக்கு உள்ளது. போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் இப்போது அவர்களின் விளம்பரதாரர்களாக நடந்து கொள்கிறார்கள் என கூறி இருக்கிறார்.
கம்பீர் விராட் கோலியை தான் சொல்லி இருக்கிறார் என ரோஹித் சர்மா ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர். ரோஹித் சர்மா சுயநலம் பார்க்காமல் ஆடுவதால் தான் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அவர்கள் கூறி வருகின்றனர்.