டெல்லி : இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பற்றி சுரேஷ் ரெய்னாவிடம் இந்திய வீரர்கள் கூறி இருக்கின்றனர்.
தோனி சக வீரர்களுக்கு மரியாதை அளித்ததை போலவே ரோஹித் சர்மாவும் மரியாதையுடன் நடந்து கொள்கிறார் என இந்திய வீரர்கள் மனம் திறந்து கூறி இருக்கிறார்கள்.
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது, எந்த வீரரும் அவரிடம் சென்று வெளிப்படையாக பேசலாம் என்ற நிலை இருந்தது. அதே போல தோனி எப்போதும் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்.
அதற்கு பின் தற்போது ரோஹித் சர்மாவும் அதே போலவே நடந்து கொள்கிறார் என இந்திய வீரர்கள் முன்னாள் வீரரும், தோனியின் நண்பருமான சுரேஷ் ரெய்னாவிடம் கூறி இருக்கின்றனர்.
இந்திய அணி தோனி தலைமையில் பல சாதனை வெற்றிகளை குவித்தது. அடுத்து கேப்டன் ஆன விராட் கோலி பல இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் வெற்றிகளை தேடித் தந்தாலும் முக்கிய தொடர்களான உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்றவற்றில் அவரால் வெற்றி தேடித் தர இயலவில்லை.

அதனால், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டன் ஆன பின் இந்திய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் போட்டிகளில் ஆடி வருகிறது.
2022 டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவற்றில் இந்தியா வெற்றி பெறாவிட்டாலும் தற்போது 2023 உலகக்கோப்பை தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போதைய இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா குறித்து தன்னிடம் மனம் விட்டு கூறிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா. "நான் எப்போது இந்திய அணி வீரர்களிடம் பேசினாலும் அவர்கள் தோனி போலவே, ரோஹித் சர்மா மரியாதையாக நடந்து கொள்கிறார் என கூறுகிறார்கள். வீரர்கள் அறையில் ரோஹித் மிகவும் நட்பாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறார்கள்." என்றார் சுரேஷ் ரெய்னா.
இந்த விஷயங்களால் இந்திய அணியின் அடுத்த தோனி என ரோஹித் சர்மாவை கூறி இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. "இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி அவர்தான் என்று நான் கூறுவேன். நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவர் அமைதியாக இருக்கிறார், அவர் மற்ற வீரர்கள் சொல்வதை கேட்க விரும்புகிறார், வீரர்களுக்கு நம்பிக்கையை வழங்க விரும்புகிறார், மேலும் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புகிறார். கேப்டனாக அணியை வழிநடத்தும் அதே நேரத்தில், டிரஸ்ஸிங் ரூம் சூழலுக்கு மரியாதை கொடுக்கிறார்" என்றார் சுரேஷ் ரெய்னா.