மும்பை : 2021ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார்.
ஆனால், அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவியை ஏற்குமாறு கூறிய போது அவர் என்ன சொன்னார் என்பது குறித்தும், அதன் பின் தான் ரோஹித் சர்மாவை ஒப்புக் கொள்ள வைத்தது எப்படி என்பது பற்றியும் வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் கங்குலி.
2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா குரூப் சுற்றோடு தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது இந்தியஅணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்தது. அவர் கேப்டனாக எந்த உலகக்கோப்பையையும் வென்று கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அவரது அணித் தேர்வு முடிவுகளும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அதற்கு முன் இந்திய அணி, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டி20 உலகக்கோப்பை என நான்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய தொடர்களில் இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு இருந்தது.
அதனால், 2021 டி20 உலகக்கோப்பை முடிவில் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சவுரவ் கங்குலி - விராட் கோலி இடையே பல மனக் கசப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து, கங்குலி ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு கூறி இருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா முதலில் மறுத்து இருக்கிறார்.
ஆனால், கங்குலி அவரை தொடர்ந்து வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா மீண்டும், மீண்டும் மறுத்த நிலையில், ஒரு கட்டத்தில் கங்குலி, நீங்களாக ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது ரோஹித் சர்மா தான் கேப்டன் என நானே உங்கள் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கவா? என அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதை அடுத்தே ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இது பற்றி அந்தப் பேட்டியில் பேசிய கங்குலி கூறுகையில், "ரோஹித் சர்மா கேப்டன் பதவியை பெற விரும்பவில்லை. எந்த அளவுக்கு அது சென்றது என்றால் நீங்களாக ஒப்புக் கொள்ளுங்கள், இல்லை என்றால் நானாக உங்களை கேப்டன் என அறிவிக்க வேண்டி வரும் என கூறும் அளவுக்கு சென்றது. விராட் கோலி விலகிய பின் இந்திய அணியை வழிநடத்த இவர் தான் சிறந்த மனிதர்" என்றார்.