டெல்லி : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா நான்காவது ஓவரிலேயே ரிவ்யூவை வீணடித்தார்.
இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தும் திட்டத்துடன் களமிறங்கியது.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் முதலில் பந்து வீசினர். சிராஜ் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலும் அதிக ரன்கள் கொடுத்தார்.
ரன்கள் கொடுத்தாலும் விக்கெட் விழ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. போட்டியின் நான்காவது ஓவரில் ஆப்கன் அணியின் துவக்க வீரர் இப்ராஹீம் சத்ரான், முகமது சிராஜ் வீசிய பந்தை தடுக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டை தாண்டி அவர் காலில் பட்டது.
உடனே சிராஜ் எல்பிடபுள்யூ அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். உடனே, முகமது சிராஜ் - கேப்டன் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்பது குறித்து பேசினர். அப்போது பீல்டிங் நின்றிருந்த இடத்தில் இருந்து அவர்கள் அருகே வந்த விராட் கோலி, தனக்கு இரண்டு சத்தம் கேட்டது என இரண்டு விரல்களை காட்டி தெளிவாகவே கூறினார். அதாவது பந்து முதலில் பேட்டில் பட்ட பின், சத்ரான் காலில் பட்டு இருக்கிறது. அதனால், இரண்டு சத்தம் வந்துள்ளது.
ஆனால், சிராஜ் நிச்சயம் பந்து பேட்டில் படவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். அதனால், கேப்டன் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்டார். மூன்றாவது அம்பயரின் ரிவ்யூவில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதை அடுத்து இந்தியா தனது ரிவ்யூவை நான்காவது ஓவரிலேயே வீணடித்தது.
கோலி சொன்னதை கேட்டு இருந்தால் இந்தியா அந்த ரிவ்யூவை பின்னர் வேறு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி இருக்கலாம். அதன் பின் இந்தியா 14 ஓவர்களில் எல்லாம் 3 விக்கெட்களை வீழ்த்தி விட்டதால் இந்த ரிவ்யூ விவகாரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.