பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் தன் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், ஒரு செய்தியை அழுத்தமாக பதிவு செய்துவிட்டே 2023 உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது.

2015 முதல் 2023 உலகக்கோப்பை வரை தொடர்ந்து 14 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் முதன் முதலாக 2019 உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
இங்கிலாந்து அணி மோசமான நிலையில் இருப்பதால் கிடைத்த வெற்றி என நினைத்த போது தான், ஆப்கானிஸ்தான் அணி அடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அந்த அணியை அரை இறுதி வாய்ப்புக்கு தவிக்க விட்டது.
அடுத்து தொடர்ந்து இலங்கை, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளை பதிவு செய்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இணையாக அரை இறுதி வாய்ப்புக்கு குறி வைத்தது ஆப்கானிஸ்தான். இதுவரை கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, மற்ற பெரிய அணிகளை விட குறைந்த போட்டி அனுபவமே கொண்டு இருந்தாலும் நான்கு வெற்றிகளை பதிவு செய்து தங்கள் பெயரை நிலை நாட்டியது.
நியூசிலாந்து அணி அதிக நெட் ரன் ரேட் வைத்து இருந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 438 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்ற சிக்கலான நிலையில் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அது சாத்தியமில்லை என்றாலும் கடைசி போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் ஆடியது.
ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 244 ரன்கள் எடுத்தது. அஸ்மத்துல்லா கடைசி வரை களத்தில் நின்று ஆடி 97 ரன்கள் குவித்தார். அடுத்து தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய வந்த போது இந்த இலக்கை எளிதாக எட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி கடும் அழுத்தத்தை கொடுத்தது. 37.1 ஓவரில் தென்னாப்பிரிக்கா 182 ரன்கள் குவித்து 5 விக்கெட்களை இழந்தது.
அதனால், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வாப்ப்யு இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் டுசென், ஆன்டில் கடைசி சில ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியை தட்டிச் சென்றனர். ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் அரை இறுதி வாய்ப்பையும் இழந்தது.
இந்தப் போட்டியிலும் கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இது தோல்வி அல்ல. இந்த உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு நிகராக ஆப்கானிஸ்தான் அணி தன் பெயரையும் நிலை நாட்டி விட்டு சென்று இருக்கிறது.