தரம்சாலா : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் நெதர்லாந்து அணியிடம், தென்னாப்பிரிக்கா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா செய்த முக்கிய தவறே அணித் தேர்வில் கூடுதல் பவுலரை சேர்க்காமல் விட்டது தான்.

தென்னாப்பிரிக்கா அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களே ஒவ்வொரு போட்டியிலும் இடம் பெற்று வருகின்றனர். சில ஓவர்களை வீசும் திறன் கொண்ட ஆல் - ரவுண்டரோ, முழு நேர ஆறாவது பந்துவீச்சாளரோ அந்த அணியில் இல்லை.
உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போதும் இதே போல ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து தென்னாப்பிரிக்கா ஆடியது. வெற்றியும் பெற்றது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை நம்பியே வெற்றி பெற்று இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 311 ரன்கள் எடுத்து இருந்தது. இப்படி அதிக ரன்களை பேட்டிங்கில் எடுத்ததால், அதை வைத்து சமாளித்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. அந்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு 326 ரன்கள் விட்டுக் கொடுத்தது தென்னாப்பிரிக்கா.
இந்த நிலையில், வெற்றியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா, நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் லுங்கி நிகிடி, ஜான்சென், ரபாடா, கோட்ஸி என நான்கு வேகப் பந்துவீச்சாளர்களையும், கேசவ் மகாராஜ் என ஒரு ஸ்பின்னரையும் மட்டும் வைத்து ஆடியது.
ஆடுகளத்தின் தன்மை, எதிரணியின் திறன் என எதையும் கணக்கில் கொள்ளாமல் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எடுத்த முடிவு தவறாக சென்றது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்த போது 34 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்து இருந்தது நெதர்லாந்து.
அதுவரை போட்டி தென்னாப்பிரிக்கா வசம் இருந்தது. ஆனால், அதன் பின் நெதர்லாந்து வீரர் ஸ்காட் எட்வர்ட்ஸ் அடித்து ஆட ஆரம்பித்தார். அப்போது ஆறாவது பந்துவீச்சாளர் இருந்திருந்தால் சில வீரர்களுக்கு கடைசி நேரத்தில் ஓவர்கள் மீதமிருந்து இருக்கும். அதை வைத்து சரியான பந்துவீச்சாளரை வீச வைத்து ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
ஆனால், ஐந்து பந்துவீச்சாளர்களினோ ஓவர்களையும் முழுமையாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதால் பவுமா, வேறு வழியின்றி அந்த ஐந்து பந்துவீச்சாளர்களின் ஓவர்களையும் முடிக்கும் வகையில் ஓவர்களை அளித்தார். அதை பயன்படுத்தி எட்வர்ட்ஸ் கடைசி ஓவர்களில் ரன் குவிக்கவே நெதர்லாந்து அணி 141 ரன்களில் இருந்து 245 ரன்கள் குவித்தது.
போட்டி நடந்த தரம்சாலாவில் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவியதால், இரண்டாம் பாதியில் நெதர்லாந்து அணிபந்துவீச்சில் கலக்கியது. தென்னாப்பிரிக்கா அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.