தரம்சாலா : 2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து முதலில் பேட்டிங் ஆடியது. போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி 34 ஓவர்களில் எல்லாம் 7 விக்கெட்களை இழந்து விட்டது.
அதற்கு முன் வரை நெதர்லாந்து அணி மிகவும் நிதான ஆட்டம் ஆடி ஓவருக்கு 4 ரன்கள் என்ற அளவில் தான் ரன் எடுத்து இருந்தது. அதாவது 34 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அப்போது நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அவரும் டெஸ்ட் மேட்ச் போலவே விக்கெட்டை காப்பாற்றும் வேலையை தான் செய்து வந்தார். இந்த நிலையில், 9ஆம் வரிசை வீரர் வான் டேர் மெர்வியுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டார் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

மெர்வியும் தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ரன் குவித்து 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்யன் தத் தன் பங்கிற்கு 9 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். ஸ்காட் எட்வர்ட்ஸ் பதுங்கிப் பாயும் புலி போல 60-70 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்து அவர் காட்டிய அதிரடியில் 100-ஐ தாண்டி அவரது ஸ்ட்ரைக் ரேட் உயர்ந்தது.
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி வரை களத்தில் நின்று 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 245 ரன்கள் குவித்தது. கடைசி ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியால் நெதர்லாந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
போட்டி நடந்த தரம்சாலா ஆடுகளத்தில் மழை பெய்த நிலையில் போட்டி நடந்ததால் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி வரிசையாக விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தது.
நெதர்லாந்து அணி 200 ரன்களை தாண்டாது என்றே முதலில் எண்ணினர். அது மட்டும் நடந்து இருந்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும். ஆனால், கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிய ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் அணியை வெற்றி பெற வைத்தார்.