அகமதாபாத் : இந்திய அணி 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தாங்கள் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தொடரை துவக்கி உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு வாழ்த்து கூறியதுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து முக்கிய செய்தி ஒன்றையும் கூறி உள்ளார்.

ரோஹித் சர்மா, பும்ராவுக்கும் சிறப்பாக ஆடியதற்காக வாழ்த்துக் கூறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மேலும், இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி உள்ளது. இரண்டு போட்டிகளிலும் பல வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய போது விராட் கோலி 85, கே எல் ராகுல் 97 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா அசத்தலாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி 84 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார்.
இந்த இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை குறிப்பிட்டே சச்சின் டெண்டுல்கர் தன் பாராட்டை கூறி உள்ளார். அத்துடன் அவர் கூறிய அந்த முக்கிய செய்தி இதுதான்.
"2 போட்டிகளில் பல வீரர்களின் பங்களிப்பை பார்க்க முடிந்தது. அது அக்டோபர் 14 அன்று நடக்க உள்ள போட்டிக்கு முன்னோட்டத்தை அளித்துள்ளது. முன்னேறி செல்லுங்கள்" என தன் செய்தியில் கூறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
அக்டோபர் 14 அன்று இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. அதைக் குறிப்பிட்டே சச்சின் இவ்வாறு கூறி இருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் போட்டிக்கான ட்ரைலர் தான் இந்த போட்டிகள் என அவர் கூறி, முக்கியமான போட்டியில் வெல்ல வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.