லக்னோ : ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் ஏழு போட்டிகளின் முடிவில் உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணியால் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் 2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்து 7 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் உள்ளன.
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி மேலேயும், ஆப்கானிஸ்தான் கீழேயும் உள்ளன. அந்த நெட் ரன் ரேட் வித்தியாசம் மாறவும் வாய்ப்பு உள்ளதால் இரண்டு அணிகளும் அரை இறுதி வாய்ப்பு பொறுத்தவரை சம நிலையில் உள்ளதாகவே கருதலாம்.
நியூசிலாந்து அணி இன்னும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் மோத வேண்டும். அந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே நியூசிலாந்து அரை இறுதி வாய்ப்பு அமையும்.
அதே போல, இன்னும் இங்கிலாந்து, மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மூன்று போட்டிகளில் ஆட வேண்டிய ஆஸ்திரேலியா, அதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றால், ஆப்கானிஸ்தான் அணியை புள்ளிப் பட்டியலில் மேலே ஏற்றி விட்டு தானாகவே சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
அப்படி நடந்தால், ஆப்கானிஸ்தான் அணி தன் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோற்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். அதுவும் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணி இப்போதே ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது மோசமாக தோல்வி அடைந்து நெட் ரன் ரேட்டை குறைத்துக் கொள்ளாதா? என்ற ஏக்கத்தில் தான் இருக்கிறது. அது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி தன் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியையும் சேர்த்து பெரிய வெற்றி பெற்று அரை இறுதிக்குள் செல்ல முடியும்.