மும்பை : உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு பெரிய கண்டம் காத்துக் கொண்டு இருக்கிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதியில் எந்த நான்கு அணிகள் மோத உள்ளன என்பது, பாகிஸ்தான் தோல்வியால் உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டாவது அரை இறுதியில் மோத உள்ளன.

கடந்த கால வரலாறை எடுத்துப் பார்த்தால், அரை இறுதி, இறுதி போன்ற நாக் - அவுட் போட்டிகளில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி தோல்விகளை மட்டுமே பரிசாக அளித்துள்ளது. அது முதல் கண்டம். அடுத்து அரை இறுதிப் போட்டி நடக்க உள்ள மைதானத்தில், இதுவரை, நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதே இல்லை. அங்கு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து மட்டுமே வெற்றிகளை பெற்றுள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டில் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதன் பின் 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பின் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா தோல்வி அடைந்தது.
ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் மூன்று முறை நியூசிலாந்து அணியுடன் மோதி, இந்தியா மூன்று முறையும் தோல்வி அடைந்துள்ளது. அதனால், தற்போது இந்திய அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் தான் சொதப்ப வாய்ப்பு உள்ளது. எனவே, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து பெரிய ஸ்கோர் அடிக்க திட்டமிட வேண்டும்.
அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அரை இறுதி நடக்க உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளன. அந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. அந்த மைதானம் பந்தை ஸ்விங் செய்ய ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி, நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் டிம் சவுதி, ட்ரென்ட் பவுல்ட், பெர்குசன் ஆகியோரிடம் முதல் சில ஓவர்களில் கவனமாக ஆட வேண்டும்.