அகமதாபாத் : பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி, இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு முன் திமிராக சவால் விட்டு போட்டியில் சொதப்பி இப்போது விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.
பரபரப்பான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் அகமதாபாத் வந்த போது சில ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.
ஒன்று செல்பி எடுக்க கேட்ட ரசிகர்களுடன் செல்பி எடுத்திருக்கலாம். விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என தவிர்த்திருக்கலாம். ஆனால், ஷஹீன் ஷா அப்ரிடி தேவையே இல்லாமல் ஒரு சவால் விட்டார்.
அதாவது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தான் 5 விக்கெட் வீழ்த்திய பின்னர் செல்பி எடுக்கிறேன் என்றார். அவர் விட்ட இந்த சவாலை அவர் நிறைவேற்றுவாரா? என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மறுபுறம், அவர் சரியாக செயல்படவில்லை என்றால் விமர்சனத்தால் நையப் புடைக்க காத்திருந்தனர்.
இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தது தான் நடந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி போட்டியில் எளிதாக வென்றது.
ஷஹீன் ஷா அப்ரிடி 6 ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவர் சவால் விட்டது போல 5 விக்கெட் வீழ்த்தவில்லை. இதை அடுத்து இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக் கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர்.
மறுபுறம், பாகிஸ்தான் ரசிகர்களும் அவர் மோசமாக செயல்பட்டார் எனக் கூறி விமர்சனம் செய்து வருகின்றனர். பேசாமல் போட்டியை ஆடாமல், சவால் விடுகிறேன் என அவமானப்பட்டு இருக்கிறார் ஷஹீன் ஷா அப்ரிடி.